நாட்டின் இந்துக்களும், பௌத்தர்களும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளிடம் சிக்கியுள்ளனர் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மஹாசோன் பலகாய அமைப்பின் பிரதானி உள்ளிட்டவர்களை ஞானசார தேரர் மற்றும் சில பௌத்த பிக்குகள் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.
இவ்வாறு சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் இந்துக்களும், பௌத்தர்களும் இஸ்லாமிய வஹாப் வாதத்திற்கும், கிறிஸ்தவ அடிப்படைவாதத்திற்கும் இலக்காகியுள்ளனர். நாட்டில் மிக மோசமான கலாச்சார ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதனால் இனங்களுக்கு இடையில் நம்பக்கையீனமும், பிரச்சினைகளும் எழுந்துள்ளன.
ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுக் கொண்டு எதனையும் சாதிக்க முடியாது, சிங்கள, தமிழ், முஸ்லிம் பேதங்களை களைந்து இணைந்து செயற்பட வேண்டும்.
மஹாசோன் பலகாயவின் உறுப்பினர்களை கைது செய்வதனால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது, 70 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களே இன முரண்பாடுகளுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும். தெல்தெனிய, திகன சம்பவங்களுக்கு நாட்டின் பிரதமர் நேரடியாகவே பொறுப்புச் சொல்ல வேண்டுமென ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.