துமிந்தசில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என கோரும் மனுவில் தாங்கள் கைச்சாத்திடவில்லை என அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
அரசநாடாளுமன்ற உறுப்பினர்கள் கெஹெலிய ரம்புக்வெல சுரேன் ராகவன் மகிந்த அமரவீர விதுரவிக்கிரமநாயக்க விமல்வீரவன்ச ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர்.
அவ்வாறான மனுஎதுவும் தங்களிற்கு வழங்கப்படவில்லை தாங்கள் அது குறித்து அறிந்திருக்கவும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
20வது திருத்தத்திற்கான வாக்களிப்பிற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த வேண்டுகோள் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது துமிந்தசில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் மனுவொன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்டதாகவும் இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைச்சாத்திடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 கருத்துகள்