உடனடியாக மாடறுபதை தடைசெய்யவும் பின்னர் அனைத்து விலங்குகளை அறுப்பதையும் தடைசெய்யவும். - சோபித்த தேரர் அதிரடி


(செ.தேன்மொழி)

நாட்டின் மீது அக்கறைக் கொண்ட தலைவர் ஒருவர் செய்ய வேண்டியது அதிகாரங்கள் அனைத்தையும் தன்வசப்படுத்திக் கொள்வதல்ல , நாட்டு மக்களுக்கான நலனைப் பெற்றுக் கொடுப்பதே என்று விலங்குகள் மற்றும் இயற்கைக்கான நீதி அமைப்பின் தலைவரான ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.

இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் , அவ்வாறு நிறைவேற்றும் வரையில் மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

நாரஹேன்பிட்டி - ஸ்ரீ சங்கா விகாரை மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை -04- விலங்குகள் மற்றும் இயற்கைக்கான நீதி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடலில் கலந்துக் கொண்டிருந்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது ,

உயிரினங்களை வதைப்பதை அனைத்து சமயங்களும் பாவச் செயல் என்றே கூறுகின்றன. இந்நிலையில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடைச் செய்ய வேண்டும் என்பது தொடர்ச்சியாக பேசப்பட்டு வரும் விடயமாகும். அதற்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு மாடுகளை வெட்டுவதை தடைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதன்போது ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் எந்த இன, மத பேதமுமின்றி அதனை ஆதரித்திருந்தனர். ஆனால் , இந்த தீர்மானமானது உடனே நிறைவேற்றப்படாமல் ஒரு மாதத்திற்கு பிற்போடப்பட்டது. இதற்கு பிரதான காரணம் இவ்வாறு இறைச்சிக்காக மாடுகளை வெட்டும் வர்த்தகர்களினால் முன்னெடுக்கப்பட்ட அழுத்தமாகும்.

தற்போது இந்த தீர்மானம் தொடர்பில் அமைச்சரவையும் அங்கிகாரம் வழங்கியுள்ளது. அதனால் மேலும் காலங்கடத்தாமல் அதனை உடனே அமுலுக்கு கொண்டுவர வேண்டும். இந்நிலையில் சிலர் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது பாவச் செயல் என்றால் , ஏனைய விலங்குகளை உணவுக்காக பயன்படுத்துவது பாவச் செயல் இல்லையா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுவும் பாவச் செயல்தான். ஆனால் , முதலில் நாம் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதை தடுத்துவிட்டு , அதிலிருந்து ஏனைய விலங்குகளையும் இறைச்சிக்காக வெட்டுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். முதலில் இந்த தீர்மானமானது ஒரு இனத்தையோ , மதத்தையோ இலக்கு வைத்து எடுக்கப்பட்டதல்ல என்பதை கவனத்திற் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்