யாரும் சொல்லவுமில்லை.. தூண்டவுமில்லை, நானாக ஏறிப் போராடினேன்!

 

ஜனாஸா எரிப்புக்கு எதிரான உணர்வுகளை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிக் காட்ட ஆரம்பித்துள்ளார்கள். இன்று கொழும்பு, பிக்சர்ஸ் லேன் பகுதியைச் சேர்ந்த ஒரு சகோதரர், மாளிகாவத்தையில் தண்ணீர் தாங்கியில் ஏறி நின்று தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் ஜனாஸா எரிப்பை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


இது போன்ற உயிராபத்தான செயல்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமாயினும், மக்கள் தம் உணர்வுகளை அடக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை. 


சனிக்கிழமையன்று லண்டனில் போராட்டம் இடம்பெற்றது. கட்டார், குவைத் மற்றும் ஓமானில் அங்கு பணியாற்றும் இலங்கையர் கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். புத்தளத்தில் அமைதியான கவனயீர்ப்பு இடம்பெற்றது, கனத்தையில் வெள்ளைத்துணி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது ... இன்று இந்த சகோதரர்!


உடல் நலக்குறைவுள்ள போதிலும் அவர் தம் சமூகத்துக்காகத் தனித்துப் போராடினார் என்பதை செய்தியாகப் பார்த்து விட்டுக் கடந்து செல்லாமல், வாக்களித்தவர்களாலும் ஏமாற்றப்பட்ட முஸ்லிம் சமூகம் ஆக்கபூர்வமான அஹிம்சாவழி போராட்டங்களைத் தொடர்ந்தாக வேண்டிய சூழ்நிலை - கால கட்டம்.


பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்ட குறித்த சகோதரர் மீது மேலதிக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்று அறியக் கிடைத்தது, அல்ஹம்துலில்லாஹ்! 


அவரவர் பொறுப்புணர்ந்து செயற்படுதல் அவசியமாகிறது.


- இர்பான் இக்பால் -

கருத்துரையிடுக

0 கருத்துகள்