நானே சுதந்திரக் கட்சியின் தலைவர் சந்திரிக்கா - இன்னும் காலமுண்டு பார்க்கலாம் மைத்திரி



தற்போதும் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.


சுதந்திரக் கட்சியின் ஸ்தாபத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 122 நினைவுத்தினம் காலி முகத்திடலில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு முன்னாள் இடம்பெற்றது.


இதில் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.


இதன்போது முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுனேத்ரா பண்டாரநாயக்க ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்


அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலரஞ்சலி செலுத்தியதாக எமது செய்தியாளர் கூறினார்.


இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க,


கேள்வி : உங்கள் தந்தை ஆரம்பித்த சுதந்திரக் கட்சியின் நிலைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


பதில் : என்ன நினைக்க வேண்டும்.?


கேள்வி : சுதந்திரக் கட்சி பயணிக்கும் பாதை சரியானதா?


பதில் : எந்த பயணமும் இல்லை. இதில் சரி பிழை என கூறுவது எப்படி.


கேள்வி : சுதந்திரக் கட்சிக்கு தற்போது அநீதி இழைக்கப்படுவதாக தற்போது இருப்பவர்கள் கூறுகின்றார்களே?


பதில் : அதனை ஒரு வருடத்திற்கு முன்னரே நான் கூறினேன். தற்போது கட்சியின் தலைவராக இருப்பவர் சட்டவிரோதமாகவே உள்ளார்.


கேள்வி : இன்றைய நினைவு அஞ்சலி நிகழ்வுக்கு உங்களுக்கு அழைப்பு கிடைக்கவில்லையா?


பதில் : இல்லை. எந்தவித அழைப்பும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு இது சொந்தமில்லை நாம் விரும்பிய நேரத்தில் வருவோம்.


இதனையடுத்து மலரஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதியும், சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவிடமும் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.


கேள்வி : சந்திரிக்கா கூறுகின்றார் தானே சுதந்திரக் கட்சியின் தலைவர் என்றும் நீங்கள் சட்டவிரோதமாகவே தலைவர் பதவியில் இருப்பதாகவும் கூறுகின்றார். உங்கள் பதில் என்ன?


பதில் : அப்படியில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்தே செயற்படுகின்றோம் எமக்குள் பிளவுகள் இல்லை.


கேள்வி : தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பீர்களா? சுதந்திரக் கட்சி கலக்கமடைந்துள்ளதா?


பதில் : இன்னும் காலமுண்டு... பார்க்கலாம். 






கருத்துரையிடுக

0 கருத்துகள்