சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பாகிஸ்தானுடன் இணைந்து செயற்பட நடவடிக்கை!

NEWS
0



பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று மாலை 4 மணியளவில் அவர் நாட்டை வந்தடைந்தார்.

இதற்கமைய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்தன, மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை வரவேற்றனர்.

இதன்போது, இலங்கை மற்றும் பாகிஸ்தான் தேசிய கீதங்கள் இசைத்து இராணுவ மரியாதையுடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள விசேட அதிதிகளுக்கான வருகைப் புத்தகத்தில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கையெழுத்திட்டார்.

அத்துடன், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினரும் பிரதமர் இம்ரான் கானுடன் வருகை தந்துள்ளனர்.

முக்கியமாக ஆடை மற்றும் அணிகலன், மருந்துப் பொருட்கள், விவசாய உணவுப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், இரத்தினங்கள் மற்றும் நகைகள், வாகன உதிரிப் பாகங்கள், தகவல் தொடர்பாடல் தொழினுட்பம், நிர்மானப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் போன்றவற்றிலான பாகிஸ்தானின் வர்த்தகத் தலைவர்களைக் கொண்ட ஒரு உயர் அதிகாரமுடைய வர்த்தக மற்றும் முதலீட்டு தூதுக்குழுவும் இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள் ஆகியோரை சந்தித்து அவர் கலந்துரையாடவுள்ளார்.

இதற்கமைய, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் பினனர், இரு தலைவர்களும் கூட்டு ஊடக சந்திப்பொன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

இதன்படி, இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும், சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் ஒரு அங்கமான பாகிஸ்தான், இலங்கையுடனான தொடர்புகளை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசித்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.

அத்துடன், தீவிரவாதத்தைப் போலவே கொரோனா தொற்று சவாலையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு, வளர்ச்சியடைந்த நாடுகள் அதிக அளவிலான உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இரு நாடுகளுக்கு இடையிலும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

அத்துடன், ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகிய நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை, இரு நாட்டு நிறுவனங்களுக்கு இடையிலான தகவல் பகிர்வின் மூலம், கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default