காட்டுத் தீவிரவாதத்தை உடனடியாகத் தோற்கடிக்க வேண்டும் - சஜித் பிரேமதாஸ




இன்று, எமது சுற்றாடலைத் தண்டிக்கும் அரசாங்கமே உருவாகியுள்ளதெனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, விடுதலைப் புலிகளை அடியோடு இல்லாதொழித்தது போன்று, நாடு என்ற ரீதியில் நாம் காட்டுத் தீவிரவாதத்தை உடனடியாகத் தோற்கடிக்க வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றச் சுற்றுவட்டத்தில் நேற்று (23) இடம்பெற்ற காடழிப்புக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், “இன்று வனத் தீவிரவாதம் அரசாக மாறிவிட்டது. சிங்கராஜ, ஹோட்டன் சமவெளி, ஆனைவிழுந்தான், நக்கில்ஸ் வனம் உள்ளிட்ட அனைத்து வனங்களும் பாரிய அழிவை எதிர்நோக்கியுள்ளன. எனவே, இதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இது இந்த நாடு மற்றும் யுகத்தின் தேவையாகும். இனம், மதம், குல வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து, எமது நாட்டைப் பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இன்று (24) மாலை, கொழும்பு விஹாரமாதேவி பூங்காவுக்கு முன்பாக நடைபெறவுள்ள சுற்றாடல் பாதிப்புக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறும், அவர் இதன்போது அழைப்பு விடுத்தார்.

காடழிப்பு, சுற்றாடல் பாதிப்புக்கு எதிராக, நேற்று (23) பகல் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் அமைதி வழிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்