ராஜித, சத்துர இருவரும் CCD யில் 5 மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறினர்




பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் சத்துர சேனாரத்ன ஆகியோர் ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவில் (CCD) சுமார் 5 மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின் அங்கிருந்து சென்றுள்ளனர்.


இன்றையதினம் (22) அங்கு முன்னிலையாகுமாறு அவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய, அவர்கள் இருவரும் இன்று முற்பகல் வாக்குமூலம் வழங்குவதற்காக அங்கு முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


62 வயதான ஊடகவியலாளரான சுஜீவ கமகே, ஒரு சிலரால் தான் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக, கடந்த 10 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் முறைப்பாடு செய்திருந்தார்.


ஆயினும், இந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட கட்டுக்கதை எனத் தெரிவித்திருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அஜித் ரோஹண, அவர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அவர் குறித்த தினத்தில் புகையிரத நிலையத்தில் தனியாக பயணிப்பது தொடர்பான CCTV காட்சிகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.


ஆயினும் இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய குறித்த ஊடகவியலாளர், தன்னையும் தனது குடும்பத்தையம் அச்சுறுத்தியதாகவும், தான் தேசிய வைத்தியசாலையில் சில தினங்களாக சிகிச்வை பெறுமளவிற்கு தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் தெரிவித்ததோடு, இது தொடர்பில் வழக்கு விசாரணையில் உள்ளதால் ஏனைய விடயங்களை நீதிமன்றில் வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.


தன்னிடமுள்ள சேமிப்பகம் (SD Card-Chip) தொடர்பில் குறித்த நபர்கள் தன்னை கடத்தி விசாரித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்