போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின்பேரில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் போதைப் பொருள் வியாபாரத்திற்குப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் முச்சக்கர வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்களிடமிருந்து ஒரு தொகுதி போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இராணுவ புலனாய்வுப்பிரிவினர் போதைப் பொருள் வியாபாரியைப் போல நடித்து தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டுவிட்டு அறுபதாயிரம் ரூபா பணத்துடன் குறித்த வீட்டிற்குச் சென்றவேளை போதை மருந்தினை கைமாறிய பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பெண்ணின் மூத்த சகோதரி போதைப் பொருள் குற்றச்சாட்டின்பேரில் ஏலவே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இச்சகோதர உறவான இருவரையும் திருமணம் செய்துள்ள பிரபல போதைப்பொருள் வியாபாரி தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைத் தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை ஹெரோயின் பக்கற்றுக்ளுடன் மதகு ஒன்றின்மீது அமர்ந்திருந்த மூன்றுபேரை பொலிஸார் கைதுசெய்யதுள்ளதாக பொலிஸார் கூறினர்.

0 கருத்துகள்