பயணத் தடை தளர்த்தப்பட்டாலும் விசேட கண்காணிப்புக்குள் மேல் மாகாணம்! – சுகாதார அமைச்சு தெரிவிப்பு.




பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மேல் மாகாணத்தில் விசேட கண்காணிப்பு முன்னெடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள ‘டெல்டா’ கொரோனா வைரஸ் தொற்று நிலையை அடுத்து, தேவையான பகுதிகளுக்குப் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் நாடு முழுவதும் எந்தவொரு கூட்டங்களையும் நடத்துவதற்கு அனுமதிக்கப்படாது.

முகக்கவசம் அணிவது, குறைந்தது ஒரு மீற்றர் தூர சமூக இடைவெளியைப் பேணுவது, கைகளைக் கழுவுவது மற்றும் ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பது போன்ற நான்கு முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள போதும் தளர்த்தப்பட்ட போதும் இந்தச் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும்.

கொரோனாத் தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டும் கொரோனாத் தொற்றை முடிவுக்குக் கொண்டுவர முழுமையான தீர்வு அல்ல. எனினும், இது தொற்றின் தீவிரத் தன்மையை குறிக்கின்றது.

நோய்த் தொற்று ஏற்படாமல் இருப்பதும் அதை வேறு ஒருவருக்குப் பரப்பாமல் இருப்பதும் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்” – என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்