15 தொடக்கம் 20 சத வீதம் வரை இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று: இறுக்கமான தீர்மானங்களை எடுக்க நேரிடும் எனவும் சுகாதார தரப்பு மீண்டும் எச்சரிக்கை



                                        (ஆர்.யசி)


நாட்டில் கொவிட் -19 வைரஸ் தொற்று பரவலானது 15-20 சத வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், நிலைமைகள் மோசமடையும் பட்சத்தில் இறுக்கமான தீர்மானங்களை எடுக்க நேரிடும் எனவும் சுகாதார தரப்பு மீண்டும் எச்சரிக்கை விடுக்கிறது. தற்போதைய புதிய வைரஸ் பிறழ்வு காரணமாக சிறுவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


நாடளாவிய கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமைகள் குறித்த புதிய தரவுகள் தொடர்பிலும், அடுத்தகட்ட சவால்கள் குறித்தும் தெளிவுபடுத்தும்போதே அவர்கள் இதனை கூறினர். இது குறித்து சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்த்தன கூறுகையில்,


நாட்டில் மீண்டும் வேகமாக கொவிட் -19 வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது, நாடு திறக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்களின் செயற்பாடுகள் பொறுப்பற்ற விதத்தில் அமைந்துள்ளமையே இதற்கு காரணமாகும். அதேபோல் தடுப்பூசி ஏற்றிவிட்டோம் என்ற எண்ணப்பாட்டில் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற  தவறுகின்றமை அதிகமாக அவதானிக்கப்பட்டுவரும் ஒரு காரணியாகும்.


தடுப்பூசி ஏற்றினாலும், எத்தனை தடவை ஏற்றிக்கொண்டாலும் அவற்றை விடவும் வைரஸின் வீரியம் அதிகமானது என்பதையே நாம் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்துக் கொண்டுள்ளோம். நாம் தடுப்பூசி ஏற்றிவிட்டோம் என்பதற்காக வைரஸ் தொற்று பரவாமல் இருக்கப்போவதில்லை.


எமது செயற்பாடுகள் காரணமாக வைரஸ் காவிச் செல்லப்பட்டு ஏனையோருக்கு பரவும் சாத்தியப்பாடுகள் அதிகமாகும். எனவே பொதுமக்கள் மிகக் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்