கரங்காவட்டையில் சாதனை நடந்தேறியதா...?

 

சம்மாந்துறை, கரங்காவட்டை காணி பிரச்சினை மிக நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு பிரச்சினையாகும். அங்கு அடிக்கடி பிரச்சினைகள் தோன்றிக்கொண்டே இருக்கும். இதுவரை தீர்வுகள் எதுவும் கிடைத்தபாடில்லை. அண்மையிலும் அங்கு ஒரு பிரச்சினை தோன்றியிருந்தது. இம் முறை தீர்வுகள் கிடைத்தது போன்ற விம்பமொன்று சில அரசியல் வாதிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இம்முறையும், இதுவரையும் எத் தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை.


கரங்கா வட்டையில் 13/21, 13/22,13/23,14/40, 14/41 என மொத்தம் 5 பிளேன்கள் உள்ளன. இது மொத்தமாக 550 ஏக்கர் காணிகளை கொண்டுள்ளது. இதில் ஏற்கனவே ஒரு குழுவினர் 14/41 எனும் பிளேனிலுள்ள காணியை பலவந்த பிடித்து, விவசாயம் செய்தும் வருகின்றனர். இம் முறை சில இனவாதிகள் 14/40 காணிகளினுள்ளும் அத்து மீறி, விவசாயம் செய்ய முற்பட்டனர். இதற்கு எதிராக குறித்த காணி உரிமையாளர்களால் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.


அரசியல் ரீதியாக தீர்வை பெற்றுக்கொடுப்பதாக இருந்தால் 14/40 பிளேன் காணிக்குள் அத்து மீறி விவசாயம் செய்ய முற்பட்டவர்களையாவது தடுத்து, எம்மவர்களை விவசாயம் செய்ய அனுமதித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் இதுவரை நடைபெறவில்லை. இவ் விடயத்தில் அரசியல் ரீதியாக எதனையும் சாதிக்க முடியாது என்ற நிலையிலேயே விவசாயிகள் வழக்கு போடுவதை இறுதியாக்கினர். தற்போது 14/40, 14/41 ஆகிய பிலேனிலுள்ள காணிகளை மீட்பதற்கான வழக்கு தாக்கலை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுகொண்டிருக்கின்றன. இதுவரை வழக்கு கூட போடுபடவில்லை. 


13/21 பிளேனிலுள்ள எமது காணியில் தனி நபர் ஒருவர் 4 ஏக்கர் காணியை பிடித்து வைத்துள்ளார். இதனை கூட எம்மவர்களால் மீட்க முடியவில்லை என்பதே கள யதார்த்தம். இதற்கு எதிராக மாத்திரமே நீதிமன்றத்தில் குறித்த வயற்காரரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 14/41 இல் உள்ள எம்மவர்களின் காணியில் இனவாதிகளால் இம் முறை விவசாயம் செய்யப்படுகிறது. இம் முறை இனவாதிகள் அத்துமீறிய காணியான 14/40 இல் இரு அணியினரும் விவசாயம் செய்யவில்லை. இதில் எங்காவாது, ஒரு இஞ்ச் நிலத்துக்காகவாவது தீர்வு கிடைத்துள்ளதா? நிலை இவ்வாறு தெட்டத் தெளிவானதாக இருக்க, கரங்காவட்டையை மீட்டுவிட்டதாக கொக்கரிப்பது எவ்வளவு அபத்தமானது. 


இவ் வழக்கு விவகாரங்களை அ.இ.ம.காவின் உயர்பீட உறுப்பினரும், சட்ட விவகாரங்களுக்கான ஆலோசகருமான சட்டத்தரணி ருஸ்தி ஹபீபே கையாழ்கிறார். இதற்கு அப்பால் இவ்விடயத்தில் அ.இ.ம.கா தலைவரோடு நெருக்கமான தொடர்பில் உள்ள சட்டத்தரணி பாறூக் லோயரும் மிக தீவிரமான கவனம் செலுத்தியுள்ளதை அறிய முடிகிறது. இவற்றை எவராலும் மறுக்க இயலாது. 2018 காலப்பகுதியில் இவ்வாறான பிரச்சினைகள் எழுந்த போது அ.இ.ம.கா தலைவர் தன்னாலான முழு முயற்சிகளையும் எடுத்திருந்தார். தற்போது இவ் விவகாரத்தில் அ.இ.ம.காவின் முக்கியஸ்தர்கள் பலர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கு அ.இ.ம.கா கட்சி ரீதியாகவும் பூரண ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.


இவ் விவகாரத்தில் இதுவரை எச் சாதனையும் நிகழ்த்தப்படவில்லை என்பதே உண்மை. சாதிப்பதற்கான முயற்சிகள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. அதுவும் தற்போது புள்ளிபோட முனையும் அரசியல் வாதிகளால் அல்ல, நீதிமன்ற கட்டமைப்பினூடாக என்ற உண்மையை இவ்விடத்தில் உறுதியாக பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். வழக்கு போட்டு, சாதிக்க முனைவதற்கு அரச ஆதரவு அரசியல் வாதி தேவையா? இவ் அணுகு முறையை சாதாரண ஒரு பொது மகனும் செய்ய முடியும்.


இதுவரை ஒரு இஞ்ச் காணியேனும் சம்மாந்துறை, கரங்காவட்டையில் மீட்கப்படவில்லை என்பதே உண்மை. இதனை வைத்து அரசியல் செய்யும் அரசியல் வாதிகள், தங்கள் பிரச்சாரத்தை நிறுத்திக்கொள்வது ஆரோக்கியமானது. இதனை காட்டி, பட்ஜட்டுக்கு ஆதரவளிக்க முனைவது அபத்திலும் அபத்தமான செயற்பாடாகும்.


துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,

சம்மாந்துறை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்