நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால், நீதியின் பொறிமுறை தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும்




நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால் நீதியின் பொறிமுறை தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.அதேவேளை வடக்கு மக்களின் சட்டபூர்வமான சிக்கல்களை தீர்த்து வைப்பது நீதிக்கான பிரவேசமாகும் எனவும் தெரிவித்துள்ள அவர், நடமாடும் சேவையின் அடிப்படை நோக்கமும் அதுவே என்றும் தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தின்கீழ் சமத்துவமான சமூகத்தை உருவாக்கும் செயற்பாடுகளை. பலப்படுத்தும் வகையில் வடக்கு மக்களுக்காக நீதியமைச்சு நடத்தவுள்ள நடமாடும் சேவை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நீதியமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரை வடமாகாணத்தை உள்ளடக்கும் வகையில் நடத்தவுள்ள Access to justice என்ற நடமாடும் சேவை தொடர்பில் தெளிவூட்டும் ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேற்படி நடமாடும் சேவை வடமாகாணத்தின் வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடைபெறவுள்ளன.

சட்டத்தை பலப்படுத்துதல் மற்றும் சமத்துவமான சமூகத்தை கட்டியெழுப்பும் வகையில் சட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதே மேற்படி நடமாடும் சேவையின் நோக்கம் என்று தெரிவித்துள்ள அமைச்சர், எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் இந்த நடமாடும் சேவையை நடத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நடமாடும் சேவைகளின் போது அந்தந்த மாவட்டங்களில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எழக்கூடிய சவால்களுக்கு முகம் கொடுக்கும் பலம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்