Headlines
Loading...
 இஸ்லாமோபோவியாவுக்காக அமெரிக்க நிதியுதவி - ஜோர்ஜ் புஷ் பாணியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை வேடிக்கைப் பார்த்த மைத்திரி – ரணில்

இஸ்லாமோபோவியாவுக்காக அமெரிக்க நிதியுதவி - ஜோர்ஜ் புஷ் பாணியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை வேடிக்கைப் பார்த்த மைத்திரி – ரணில்


- லத்தீப் பாரூக் -



இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்புணர்வைத்தூண்டிவிடும் வகையிலான இஸ்லாமோபோவியாவுக்காக பணம் செலவிடப்படுவது அமெரிக்காவில் இன்று ஒரு தொழில்துறையாகவே மாறி வருகின்றது. அண்மைக்கால ஒரு அறிக்கையின் படி அமெரிக்க முஸ்லிம்களுக்கு எதிராகவும் இஸ்லாத்துக்கு எதிராகவும் வெறுப்புணர்ரவைத் தூண்டும் வகையிலான செயற்பாடுகள் பல பில்லியன் டொலர்கள் கொண்ட ஒரு தொழில்துறையாகவே மாறி உள்ளது.

2022 ஜனவரி 11ல் வெளியாகி உள்ள 'பிரதான பிரிவில் இஸ்லாமோபோபியா' எனும் தலைப்பிடப்பட்ட Council on American-Islamic Relations CAIR (அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் சபை) நிறுவன அறிக்கையில் இது பற்றி பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது ஒரு சிவில் உரிமைகள் மற்றும் அரசியல் சார்பு அமைப்பாகும்.. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இன மற்றும் பால் நிலையத்தோடு இணைந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இஸ்லாமோபோபியா செயற்பாடுகளுக்காக 74 குழுக்கள் பங்களிப்புச் செய்து வருவதாக இந்த அறிக்கையில் அதிர்ச்சி ஊட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 33 குழுக்கள்; முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக ஆத்திரமூட்டலை அல்லது வெறுப்பை ஊக்குவித்தலை தமது பிரதான இலக்காகக் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைத் தயாரித்துள்ள ஊயுஐசு நிறுவனத்தின் இஸ்லாமோபோபியாவுக்கு எதிரான செயற்பாடுகளைக் கண்;கானிக்கும் பிரிவின் பணிப்பாளர் கொரே சேய்லர் 'இந்த குழுக்கள் வழங்கி வரும் நிதி உதவிகள் நாடு முழுவதும் பள்ளிவால்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் போன்ற நேரடி விளைவுகளைக் கொண்டுள்ளன. அத்தோடு அமெரிக்காவில் முஸ்லிம்கள் மீது பாரபட்சம் காட்டும் வகையிலான சட்டங்களுக்கும் இவை காரணமாக அமைகின்றன' என்று தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனை தளமாகக் கொண்டு செயற்படும் பாதுகாப்புக் கொள்கை மற்றும் அமெரிக்காவுக்கான சட்டங்களுக்கான நிலையம் இதில் மிகவும் பிரதானமானது ஏனெனில் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான தமது சொற்றொடர்களுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க முயன்று வருகின்றனர் என்று சேய்லர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நியுயோர்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் ஆகிய இடங்களில் இடம்பெற்ற செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்க அரசாங்கமே இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தரக்குறைவாகச் சித்தரிக்கும் பிரசாரங்களை அனுமதிக்கத் தொடங்கியது. முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நியாயப்படுத்துவதும் இதன் ஒரு நோக்கமாகும்.

பல அறிக்கைகளில் ஏற்கனவே தெரிவித்துள்ளதன் படி அந்தத் தாக்குதல் ஒரு உள்வீட்டு வேலை என்பது தெளிவாகி உள்ளது. முஸ்லிம்களுக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. எவ்வாறேனும் முன்னாள் ஜனாதிபதி புஷ், பெரும்பாலும் திட்டமிட்டப்படி இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் மீது குற்றம் சாட்டினார். அதனைக் காரணமாக வைத்துக் கொண்டு உலகளாவிய ரீதியில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக ஒரு நாசகார பிரசாரத்தையும் அவர் தொடக்கி வைத்தார்.

இதத்தகைய பிரசாரம் ஒன்று அவர்களுக்கு அவசியம் தேவைப்பட்டது. ஆப்கானிஸ்தான், குவைத், ஈராக், சிரியா, லிபியா, லெபனான், யெமன் ஆகிய நாடுகளில் ஏற்கனவே தாங்கள் விளைவித்த அழிவுகளைப் போல் முஸ்லிம் நாடுகளில் மீண்டும் ஒரு அழிவையும் நாசத்தையும் உருவாக்கும் வகையில் தமது சட்டவிரோத யுத்தத்தை முன்னெடுத்துச் செல்ல இந்தத் தேவை அவர்களுக்கு ஏற்பட்டது

2001 செப்டம்பர் 11 தாக்குதலின் பின் அமெரிக்க ஜனாதிபதி புஷ் பயங்கரவாதத்துக்கு எதிரானப் போர் என்ற போர்வையில் ஆரம்பித்த யுத்தம் மிகவும் விரிவான நோக்கங்களைக் கொண்டிருந்தது உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் அரசியல், இராணுவம், பொருளாதாரம், நிதி, சமூகம், சமயம், கலாசாரம் என எல்லாப் பிரிவுகளையும் அடியோடு ஆட்டம் காண வைப்பதே இதன் பிரதான குறிக்கோளாக அமைந்தது.

அங்கிருந்து தான் உலகம் முழுவதும் முஸ்லிம்களை மனிதாபிமானவற்றவர்களாகவும் நாகரிகம் தெரியாத காட்டு மிராண்டிகளாகவும் சித்தரித்துக் காட்டும் மிகக் கவனமான முறையில் நன்கு திட்டமிடப்பட்ட பிரசாரங்களும் தொடங்கின. முழு முஸ்லிம் உலகமும் நிம்மதியற்ற கொந்தளிப்பான ஒரு மோதல் நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு முஸ்லிம் நாட்டையும் அவர்கள் சாம்பல் மேடுகளாகவும் சுடுகாடுகளாகவும் மாற்றத் தொடங்கினர். உலக மனித வரலாறு காணாத சிக்கல்களை முஸ்லிம்கள் பல திசைகளில் இருந்தும் எதிர் கொண்டனர். முஸ்லிம்களால் பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த பிரச்சினைகளைத் தோண்டி எடுத்து அவற்றைக் கொண்டே அவர்களை மோத விட்டனர்.

தாடி வைத்திருந்த ஒவ்வொரு முஸ்லிம் ஆணும், தலைக்கு முக்காடு இட்டிருந்த ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் அச்சத்தோடு நடமாடும் சூழல் உருவாக்கப்பட்டது. குறிப்பாக மேலைத்தேச நாடுகளில் அவர்களின் சுதந்திர நடமாட்டம் பறிக்கப்பட்டது. ஒரு காலத்தில் வளைகுடாவிலும் மத்திய கிழக்கிலும் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது இரண்டாவது இருப்பிடமாகவும் மிக விருப்பமான விடுமுறை பிரதேசமாகவும் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் கருதி இருந்தனர். ஆனால் அவர்கள் அங்கு செல்ல அஞ்சி மலேஷியாவுக்கும் ஏனைய ஆசிய நாடுகளுக்கும் தமது விடுமுறைப் பயணங்களை மேற்கொண்டனர். ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் அமெரிக்காவிலும் முஸ்லிம்கள் மீது பிரயோகிக்கப்பட்ட நெருக்குதல்களில் இருந்து தப்பும் வகையிலேயே அவர்கள் தமது விடுமுறை பயணங்களை மாற்றி அமைத்தனர்.

ஒரு காலத்தில் உலகப் பகழ்பெற்ற பொப் இசைப் பாடகர் கெட் ஸ்டீவன்ஸ் பின்னர் இஸ்லாத்தை தழுவி யூசுப் இஸ்லாம் என்ற பெயரில் உலகளாவிய ரீதியில் சமாதானப் பணிகளில் ஈடுபட்டு நன்மதிப்பைப் பெற்றுள்ளவர். இவர் 2004 செப்டம்பரில் லண்டனில் இருந்து நியுயோhக் நகரம் வந்த போது நியுயோhக்கில் அவர் அவமானத்துக்கு உற்படுத்தப்பட்டு எந்தக் காரணமும் தெரிவிக்கப்படாமல் மீண்டும் லண்டனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

அவர் இஸ்லாத்தை தனது அன்றாட வாழ்வில் பின்பற்றும் ஒரு போதகராக இருந்தார் என்பதைத் தவிர இந்த அவமானத்துக்கு வேறு காரணங்கள் எதையும் கூற முடியாமல் உள்ளது. (இன்னமும் அவருக்கு அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இரசிகர்கள் உள்ளனர்) மனித உரிமைகள் சுதந்திரம் என்பன பற்றி வாய் கிழியப் பேசும் அமெரிக்காவில் ஒரு உலகப் புகழ் பெற்ற மனிதருக்கு இந்தக் கதி என்றால் உலகின் ஏனைய நாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் எந்தளவு துன்பங்களை அனுபவித்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்கவே கஷ்டமாக உள்ளது.

செப்டம்பர் 11 தாக்குதலின் பின் பூகோள ரீதியாக ஏற்பட்ட அரசியல் நிலைமைகளை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு முஸ்லிம் நாடுகளை அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டது. உலகளாவிய ரீதியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய அமைப்புக்கள், அவற்றுக்கு முஸ்லிம் நாடுகள் அளித்துவந்த உதவிகள் என்பன பற்றிய தரவுகளையும் தகவல்களையும் அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் சம்பந்தப்பட்ட நாடுகளை அச்சுறுத்திப் பெற்றுக் கொண்டனர். அல்குவைதா அமைப்புடன் தொடர்புடைய நாடுகள் மற்றும் அமைப்புக்கள் பற்றியத் தகவல்களைத் திரட்டும் போர்வையிலேயே இது இடம்பெற்றது.

பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் ஏன் மத்திய கிழக்கின் ஒவ்வொரு முஸ்லிம் நாடும் என்று கூட கூறலாம் பல விமானங்களில் அவர்கள் கேட்ட தரவுகளையும் கோவைகளையும் அனுப்பி வைத்தனர். முஸ்லிம் அமைப்புக்கள் பற்றி எல்லா விவரங்களும் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. அந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள், அவை செயற்படும் இடங்கள், அவற்றின் செயற்பாடுகள் என முழுமையான விவரங்கள் எல்லாமே அமெரிக்காவுக்குக் கிட்டியது. தமது சுய கௌரவம், தமது நாடுகளின் சொந்தப் பாதுகாப்பு என எதைப் பற்றியும் யோசிக்காமல் அமெரிக்காவிடம் நல்ல பெயர் வாங்கி தமது இருப்புக்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் முஸ்லிம் நாடுகளின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.

மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மஹாதிர் மொஹமட் ஒரு தடவை குறிப்பிட்டது போல் 'முஸ்லிம் நாடுகள் குண்டு வீசி தாக்கப்படுகின்றன ஆனால் அந்தத் தாக்குதலை நடத்துபவர்களுக்கு தண்டனையில் இருந்து விடுபாட்டுரிமை அளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் சித்திரவதை செய்து கொல்லப்படுகின்றனர். அவர்களது மார்க்கமும் அதன் தூதரும் சிதைக்கப்படுகின்றனர். உலகில் முஸ்லிம்கள் தான் மிகவும் வறுமையான மக்கள். அவர்களது நாடுகள் குறைந்த அபிவிருத்தியையே கண்டுள்ளன. ஏராளமான செல்வம் இருந்தும் இந்த நிலை அங்கு காணப்படுவது மிகவும் கவலைக்குரியது'



இலங்கையில் 2009 மே மாத் முடிவுற்ற உள்நாட்டு யுத்தத்தின் பின் இஸ்லாமோபோபியா தலை தூக்கியது. இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் தீங்கு விளைவிக்கும் தீய நிகழ்ச்சி நிரலைக் கொண்டு செயற்படும் இஸ்ரேல் மற்றும் இந்தியாவின் இந்துத்வா சக்திகளுக்கு அரசாங்கம் தாராளமாக தனது கதவுகளைத் திறந்து விட்ட கையோடு இது தொடங்கியது.



இதன் விளைவாக எந்தக் காரணமும் இன்றி அரச ஆதரவு பெற்ற இனவாத சக்திகள் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் கைத்தொழில் மையங்கள் என எல்லாவற்றையும் தாக்கத் தொடங்கின



ஏப்பிரல் 21 உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் நூற்றுக் கணக்கான அப்பாவிகள் கொல்லப்படும் வரை இத்தகைய அர்த்தமற்ற தாக்குதல்கள் ஆங்காங்கே தொடராக இடம்பெற்றன. உயிர்த்தஞாயிறு தாக்குதலில் சில முஸ்லிம் பெயர் கொண்ட நபர்கள் ஈடுபட்டது உண்மை. ஆனால் இந்த சம்பவத்துக்கும்; ஒட்டு மொத்த சமூகத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பது இப்போது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.



இதை ஏற்கனவே நன்கு தெரிந்திருந்தும் கூட மைத்திரி – ரணில் அரசு ஜோர்ஜ் புஷ் பாணியில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகளை வேடிக்கைப் பார்த்தது. நியுயோர்க்கில் இடம்பெற்ற செப்டம்பர் 11 தாக்குதலாயினும் சரி இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்தஞாயிறு தாக்குதலாயினும் சரி இரண்டு சம்பவங்களினதும் பிரதான சூத்திரதாரி யார் என்பது இதுவரை கண்டு பிடிக்கப்படாமல் இருப்பதும் கவலைக்குரியது.

0 Comments: