News
அவதானம் - தரம் ஏழு மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் புத்தக காகிதத்தில் விஷம்
பாடசாலைகளில் தரம் ஏழு மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் புவியியல் புத்தகம் விஷ இரசாயனத்தினாலான காகிதத்தால் அச்சிடப்பட்டுள்ளது. இது மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியது.
அத்துடன் தற்போது மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கும் 2 இலட்சத்திற்கும் அதிகமான குறித்த புவியியல் புத்தகங்களை மீளப்பெறுவதற்கு ஜனாதிபதி விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அச்சங்கத்தின் பிரதிச் செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார்.
தொழில்சார் நிபுணர்களின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாடசாலைகளில் தரம் ஏழு மாணவர்களுக்காக தற்போது வழங்கப்பட்டிருக்கும் புவியியல் புத்தகங்கள் விஷ இரசாயனத்தினாலான காகிதத்தால் அச்சிடப்பட்டுள்ளது. குறித்த காகிகத்தால் அச்சிடப்பட்டுள்ளமையால் மாணவர்களின் ஆரோக்கியத்தில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.
குறித்த விஷ இரசாயனத்தினாலான காகிதத்தால் அச்சிடப்பட்ட 5 இலட்சம் புத்தகங்களுக்கு அரசாங்கத்தினால் 15 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரம் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த திட்டத்தினை பரிசோதித்து தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய திட்டமிடல் திணைக்களம் ஆய்வு முடிவொன்றை வெளியிட்டது. அதில் குறித்த இரசாயனத்தினாலான காகித புத்தகத்தினால் சுற்றாடல் பாதிப்பு, மாணவர்களின் ஆரோக்கியத்தில் சீர்கேடு மற்றும் தொழிநுட்ப பிரச்சினைகள் ஏற்படும் என அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
எனினும் அவ்வறிக்கையினை கல்வி அதிகாரி அமைச்சரவை பத்திரிகையுடன் சமர்ப்பித்திருக்கவில்லை. அத்துடன் அச்சிடப்பட்ட 5 இலட்சம் புத்தகங்களில் தற்போது 2 இலட்சத்திற்கும் அதிகமானவை நாடளாவிய ரீதியில் இயங்கும் பாடசாலைகளின் தரம் 7 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கின்றன.
குறித்த புத்தகத்தின் காகிதத்தில் அசற்றோபினோன்,பென்சலிடிகயிட்,பென்சயில் அற்ககோல், பென்சோபினோன் போன்ற இரசாயனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களின் கண்பார்வைக்கு தீங்கேற்படுத்துவதுடன் உடல் நல ஆரோக்கியத்துக்கு கேடும் விளைவிக்கும். அத்துடன் குறித்த காகிதத்தால் சுற்றாடல் பாதிப்பும் ஏற்படும்.
ஆகவே, சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய தருணத்தில் இவ்வாறான அரசாங்கத்தின் முறையற்ற கொள்கைத்திட்டத்தால் பாரிய பாதிப்புக்களை எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டியேற்படும். இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் அறிவித்திருக்கின்றோம். ஜனாதிபதி நாட்டின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டு விநியோகிக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை மாணவர்களிடம் இருந்து மீளப்பெறு வதற்கான நடவடிக்கையினை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் இது குறித்த விசாரணைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
0 Comments: