வட மாகாண முஸ்லிம்களின் விவகாரங்கள் 2017 மார்ச் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் பேசப்படவேண்டும் என வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்துள்ளர். ஐ.நா மனித உரிமை மாநாட்டிலே வடக்கு முஸ்லிம்களும் பங்கேற்றல் தொடர்பான சாத்தியப்பாடுகள் குறித்து நேற்று வட மாகாண முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே இக்கருத்துக்களை அவர் முன்வைத்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைத்திருக்கும் கருத்துக்களை முழுமையாகவும், நிதானமாகவும் கூர்ந்து அவதானித்தல் அவசியமாகும். ஏற்கெனவே முன்மொழியப்பட்ட தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதிலே எவ்வித மாற்றங்களும் ஏற்படாது. அதன் நோக்கங்களும், அதனை நோக்கிய பயணங்களும் மாறாது நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
ஆனாலும் இலங்கை விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு உரிய விளைவுகளை எதிர்பார்ப்பதாயின் அமைச்சர் குறிப்பிட்ட விடயங்களை வேகமாக அமுலாக்குவதற்கான உத்தரவாதங்களைப் பெற்றுக்கொள்வதோடு, கடுமையான மேற்பார்வை முறைமையொன்றை அறிமுகம் செய்தல் அவசியமாகின்றது. பொதுவாக இலங்கையின் நிலைப்பாடானது வரவேற்கத்தக்கதாகவும், நியாயப்பாடுகளை உள்ளடக்கியதாகவும் இருக்கின்ற அதே சந்தர்ப்பத்தில் இலங்கை அரசு மீண்டுமொருதடவை ஐ.நா. தீர்மானத்தை தன்மீது விதியாக்கிக்கொண்டுள்ளது என்பதை உறுதிசெய்துள்ளது.
ஜெனிவா மனித உரிமை மாநாட்டினது இலங்கைதொடர்பான தீர்மானத்தை முஸ்லிம் மக்கள் பூதத்தைப் பார்ப்பதுபோன்றே பார்த்தார்கள், அல்லது அவ்வாறு பார்ப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். எங்களுடைய அரசியல் தலைமைகளும், சிவில் சமூகத்தலைவர்களும் ஜெனிவா தீர்மானம் குறித்து சரியான விளக்கங்களை மக்களுக்கு வழங்கவில்லை. இதன்காரணமாக அத்தீர்மானத்திற்கும் முஸ்லிம் மக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையேற்பட்டிருக்கின்றது.
அத்தீர்மானத்தை நாம் அறிவுபூர்வமாக அணுகக் கடமைப்பட்டிருக்கின்றோம். அதில் இருக்கின்ற சாதக பாதகங்கள் குறித்து ஆராய்வது எமது கடமையாகும். அதேபோன்று அதுகுறித்து ஒரு நடுநிலையான தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முஸ்லிம் மக்கள் முன்வரவேண்டும். அவ்வாறு ஒரு தீர்மானத்தை முன்னிறுத்தி அதன்மூலம் மக்களுக்கும் நாட்டுக்கும் கிடைக்கக்கூடிய நன்மைகளையும், பாதகங்களைங்களையும் அறிந்துகொண்டு செயற்படவேண்டும். இப்போது ஒரு தீர்க்கமான கட்டம் எம்முன்னால் ஏற்பட்டிருக்கின்றது. இதனை நாம் சாதகமாகப் பயன்படுத்தவேண்டும்.
இலங்கை அரசாங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதுவிடயத்தில் சரியான நிலைப்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றார்கள் என்றே எனக்குத் தோன்றுகின்றது. ஒரு சிலர் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என்று கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். கால அவகாசம் வழங்கக் கூடாது என்றால் அடுத்தது என்ன என்ற கேள்வி எழுகின்றது. ஐ.நா. மன்றிலே கால அவகாசம் வழங்காதீர்கள் என்று சொல்கின்றவர்கள், ஐ.நா. அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையும் குறிப்பிடவேண்டும். கால அவகாசம் வழங்க வேண்டாம் என்று சொல்கின்றவர்கள் ஐ.நா. தீர்மானம் நீர்த்துப்போவதற்கு வழிசெய்கின்றார்கள் என்றே அர்த்தம் கொள்ளவேண்டியிருக்கின்றது.
இலங்கை முஸ்லிம்களும் ஐ.நா. தீர்மானம் குறித்து சுயாதீனமான ஒரு நிலைப்பாட்டினை மேற்கொள்ளவேண்டிய தேவை இருக்கின்றது. அதிலும் குறிப்பாக வடகிழக்கு முஸ்லிம்கள் இதுவிடயத்தில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இங்கு ஒன்றுகூடியுள்ள வடக்கு முஸ்லிம்கள் தம்முடைய நிலைப்பாட்டினை முதலில் வெளிப்படுத்துவதன் மூலம், ஐ.நா. தீர்மான விடயத்தில் முஸ்லிம் சமூகம் தன்னுடைய நிலைப்பாட்டினை முன்வைப்பதற்கான ஒரு வழி பிறக்கும் என்றுதான் நான் கருதுகின்றேன். அதனடிப்படையில் வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் எவ்விதமான பக்கச்சார்புமின்றி சுயாதீனமாக இதுவிடயத்தில் தன்னுடைய நிலைப்பாட்டினை வடிவமைத்து அதனை வெளியிடல் வேண்டும் என்ற முடிவை நான் வரவேற்கின்றேன். என்றும் குறிப்பிட்டார்.
