இலங்கையில் உள்ள முஸ்லிம் மையவாடிகள் குறித்து விஷேட கவனத்தை முஸ்லிம் கலாச்சார அமைச்சு, அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, முஸ்லிம் உள்ளுராட்சி மன்றங்கள் எடுக்க வேண்டும் என சிலோன் முஸ்லிம் ஊடக வலமையப்பின் சமூக விவகாரங்களுக்கான பணிப்பாளரும் பிரபல தொழிலதிபருமான அல்-ஹாஜ் லியாக்கத் அலி குறிப்பிட்டார்.
சிலோன் முஸ்லிம் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா மற்றும் விருது வழங்கல் விழாவிற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் தொடர்பான கூட்டம் இன்று சிலோன் முஸ்லிம் தலைமையகமான சுல்லியார் பார்க்கில் இடம்பெற்றது, இதன்போது சமூக விவகாரங்கள் குறித்த அமர்வின் போதே இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர்,
முஸ்லிம் மையவாடிகளில் யார் யார் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதற்கான கையேடு இருக்கவேண்டும், இதற்கான ஊழியர் நியமிக்கப்படவேண்டும், இது தவிர அனைத்து மையவாடிகளுக்கும் செகியுரிட்டி கார்ட் இருக்க வேண்டும், ஒவ்வொரு மையவாடிக்கு மென ஜனாசா வாகனங்கள் இருக்க வேண்டும். இதனை பள்ளிவாசல்களில் இருக்கும் சகாத் நிதியங்கள் வழங்க செயற்படுத்த முன்வருதல் வேண்டும்.
முஸ்லிம் மையவாடிகள் வெறுமனே மையத்து பிட்டிகளாக இருக்காமல், அதன் அழகும் தரமும் பேணப்படல் வேண்டும். இறுதியாக நாங்கள் அடங்க இருக்கும் இடங்களில் அழகு குறித்தும் அதன் பராமரிப்பு குறித்தும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றார்.
