உள்ளூராட்சி மன்றங்கள் இயங்காமையே டெங்கு நோய் பரவ காரணம்

NEWS

அஷாப்

தற்போதைய அரசானது உள்ளூராட்சி மன்ற தேர்தலை இழுத்தடிப்பு செய்து வருகிறது.இதன் காரணமாக உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளூர்களை சுத்தமாக பேணுவதில் அசிரத்தையாக இருக்கின்றன.இதுவே இன்று டெங்கு அபாயம் தலைதூக்குவதற்கான மூல காரணம் என நேற்று 23-03-2017ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

டெங்குநோயானது காலத்திற்கு காலம் தலை தூக்கினாலும் தற்போதுள்ளளவு ஒரு போதும் பாரதூரமாக இருக்கவில்லை.அண்மையில்டெங்குவினால்19 மரணங்கள் சம்பவித்துள்ளன.தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை இவ்வரசு நடத்தாமல் இழுத்தடிப்புச் செய்து வருவதால் அவர்களின் செயற்பாடுகள் மந்தகரமாகவே மேற்கொள்ளப்படுகின்றன.இதனால் சுகாதார சீர் கேடுகளை மிக அதிகமாக அவதானிக்க முடிகிறது.சுகாதார சீர் கேடுகள் நிலவுகின்ற போது அங்கு டெங்கு போன்ற நுளம்புகள் பெருகி மனித இனத்தை அழித்துவிடும்.இன்று டெங்கு நோய் தலை தூக்கியுள்ளமைக்கு இவ்வரசின் உள்ளூராட்சி மன்றங்களை இழுத்தடிக்கும் செயற்பாடே காரணமாகும்.

உள்ளூராட்சி மன்றங்களை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆளும் போது அவர்கள் பல்வேறு திசைகளுக்கும் சென்று நிதிகளை கொண்டு வந்து சேவை செய்வார்கள்.அதே நேரம் அரசினால் நியமிக்கப்படுகின்றவர்கள் ஆளும் போது அவர்கள்  ஒரு குறித்த எல்லைக்குள் நின்று கொள்வார்கள்.இன்னும் தெளிவாக சொல்வதானால் நிர்வாக வேலைகளோடு அவர்களின் வேலைகளை முடக்கி கொள்வார்கள்.இதற்கே அவர்கள் பழக்கப்பட்டவர்களுமாவர்.


இவ்வரசு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அண்ணளவாக இரு வருடங்களாக இழுத்தடிப்புச் செய்து வருகிறது.இதற்கு எல்லை நிர்ணயம் என்ற விடயத்தை சாட்டாக கூறி வருகிறது.புதிய முறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதன் மூலம் இவ்வரசு அப்படி என்ன புதுமை சீர் திருத்தத்தை கண்டு விடப்போகிறது.இவ்வாறான பல விடயங்களை கருத்திற் கொண்டுஇவ்வரசானது சாட்டுப் போக்குகளை கூறி தேர்தலை பிற்போடாமல் உடனடியாக நடாத்த முன் வர வேண்டும்.
Tags
3/related/default