தகுதியானவர்களுக்கு முதலில் பதவிகளை வழங்குங்கள் : பிரதமர் ரணில்



திறமையான மற்றும் தகுதியானவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை வழங்குமாறு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் அமைப்புச் சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கட்சியை வலுப்படுத்தி, கட்சிக்கும் மக்களுக்கும் கூடிய சேவைகளை செய்து, அடுத்த தேர்தலில் கட்சியை வெற்றிப்பெற செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதே அவரது நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனக்கு எதிராக செயற்பட்டவர்கள், சஜித் பிரேமதாசவுக்கு உதவியவர்கள் என எந்த பேதங்களையும் ஏற்படுத்திக்கொள்ளாது செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தொகுதி அமைப்பாளர் மற்றும் ஏனைய பதவிகளை வழங்கும் போது ரணில் அணி, சஜித் அணி என பிரித்து பார்க்காது திறமைசாலிகளுக்கும், தகுதியானவர்களுக்கு பதவிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில், நாடு முழுவதும் 116 தொகுதி அமைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் அடுத்த சில தினங்களில் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் மே தினம் முடிந்த பின்னர், அனைத்து தொகுதிகளுக்கும் அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.