முஸ்லிம் காங்கிரஸ் மீது அதன் பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர்களுக்கே நம்பிக்கையில்லாத
நிலை ஏற்பட்டுள்ளது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
கடந்த தேர்தல் காலத்தில் மாற்றுக் கட்சிகளின்
வெற்றிக்கு உழைத்த சிலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை
காலை குறிஞ்சாக்கேணியில் இடம் பெற்ற போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மத்
முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்தவர். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீரும் முஸ்லிம்
காங்கிரசைச் சேர்ந்தவர். அதேபோல மத்திய அரசாங்கத்தின் சுகாதார பிரதியமைச்சர் பைசல்
காஸீமும் அதே கட்சியைச் சேர்ந்தவர்தான்.
ஆனால் மூதூர் வைத்தியசாலை தரமுயர்வு தொடர்பாக
அப்பகுதியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் லாஹிர் பொதுமக்களை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டம்
நடத்துகின்றார். முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் அந்த ஆர்ப்பாட்டத்தில்
கலந்து கொள்கிறார்.
இது எதனை நமக்கு உணர்த்துகின்றது? முஸ்லிம் காங்கிரசின்
முதலமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், சுகாதார பிரதியமைச்சர் ஆகியோரில் முஸ்லிம் காங்கிரஸ்
பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர்
ஆகியோருக்கு நம்பிக்கையில்லாத நிலையையே இது காட்டுகின்றது.
வைத்தியசாலை அபிவிருத்தி, தரமுயர்வு தொடர்பான விடயங்களில் இத்தனை பலம்
முஸ்லிம் காங்கிரசுக்கு இருக்கின்றது. அலுவலக அறைக்குள் இருந்து கொண்டே வைத்தியசாலை
தரமுயர்வு தொடர்பாக தீர்மானம் எடுக்கக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. எனினும் அவர்களால் அதனைச் செய்ய
முடியவில்லை. வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்தும் அதனை சாப்பிட முடியாத நிலையையே இது
காட்டுகின்றது.
இதனால் இந்த சுகாதார அமைச்சர்கள்
இனியும் செய்வார்கள் என்ற நம்பிக்கை பாராளுமன்ற உறுப்பினருக்கும் மாகாண சபை உறுப்பினருக்கும்
இல்லாமல் போய் விட்டது. இந்தப் பலவீனத்தை வெளியே சொல்ல முடியாத நிலை அவர்களுக்கிருப்பதால்
தான் பொதுமக்களை இணைத்து கொண்டு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
அரசாங்கத்தின் மேல் மட்டமும் இந்த ஆர்ப்பாட்டத்தின்
சூழ்நிலையை உணர்ந்து கொண்டதால் தான் எவ்வித பிரபலிப்பும் அதற்கு கிடைக்கவில்லை. அதிகாரம்
கொடுத்தும் செய்யவில்லை என்றால் இது யாரின் தவறு என்பது மேல் மட்டத்திற்கு தெரிகின்றது. இதன் யதார்த்தத்தை பொதுமக்கள் இப்போது உணர ஆரம்பித்துள்ளார்கள்.
என்னதான் அரசியல் அதிகாரங்களைக் கொடுத்தாலும் அதனை வைத்து எதனையும் சாதிக்க முடியாத
கட்சிகளில் இருந்து பிரயோசனமில்லை என்பதை உணர்ந்து கொண்டவர்கள் பெரிய கட்சிகளில் சேர்ந்தால்
தான் எதையாவது சாதிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்.
