இம்மாதத் தொடக்கத்தில் சிரியாவில் சரீன்
வாயு அல்லது அது போன்ற ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடந்ததை
மறுக்க முடியாத அளவு சோதனை முடிவுகள் தெரிவிப்பதாக தடைசெய்யப்பட்ட ரசாயன
ஆயுதங்கள் பயன்பாட்டை கண்காணிக்கும் நிறுவனமான ஓபிசிடபுள்யூ
தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நான்கு ஆய்வு கூடங்களில்
ரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்பட்ட 10 பேரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட
மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதாக ஓபிசிடபுள்யூ அமைப்பின் தலைமை அதிகாரி
அஹமெட் ஜுமுகு தெரிவித்தார்.
கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த கான் ஷேக்கூன் பகுதியில் நடந்த தாக்குதலில் குறைந்தது 87 பேர் கொல்லப்பட்டனர்.
தான் ரசாயன ஆயுதங்கள் எதனையும் பயன்படுத்தவில்லை என சிரியா ராணுவம் மறுத்துள்ளது.
இதனிடையே, ரசாயன ஆயுதங்கள் நிரம்பிய
கிளர்ச்சியாளர்களின் கிடங்கு ஒன்றின் மீது வான் வழித்தாக்குதல் நடத்தியதாக
சிரியாவின் கூட்டாளியான ரஷ்யா தெரிவித்தது பரவலாக மறுக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதல்களுக்கு பதிலடி தரும் வகையில் சிரியாவின் ராணுவ விமானதளம் மீது அமெரிக்கா வான் வழித்தாக்குதல் நடத்தியது.
