மீத்தொட்டமுல்லவில்
குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட மரணங்களுக்கு
பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும்
ஜூன் அல்லது ஜூலை மாதமளவில் புதிய வீடுகளை வழங்குவதற்கு
தீர்மானித்துள்ளதாகவும் தெரவித்துள்ளார்.
வியட்னாமிலிருந்து
நாடு திரும்பிய பிரதமர், நேற்றைய தினம் மீதொட்டமுல்ல பகுதிக்கு
விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்ததுடன் பாதிக்கப்பட்ட
மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இதற்கிடையில்
இந்த விவகாரம் தொடர்பில் நேற்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின்
பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டயீடு வழங்குவது தொடர்பில் விரிவாக
ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது
இவ் விபத்தில் முழுமையாக சேதமடைந்த 98 வீடுகளில் வசிக்கும்
மக்களுக்காக மிகவும் துரித கதியில் வீடுகளை பெற்றுக் கொடுக்க
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்தினால்
ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் மதிப்பீடுகளை
இவ்வாரத்தினுள் முடித்து விட்டு, மதிப்பீட்டு அறிக்கையொன்றை பெற்றுத்
தருமாறு மதிப்பீட்டு திணைக்களம் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து
நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கை
கிடைத்தவுடன் அனைத்து நஷ்டஈடுகளுக்காகவும் வழங்கப்பட வேண்டிய
நிதியை துரித கதியில் பெற்றுக் கொடுப்பதற்கும் தேவையான நிதியுதவிகளை
திறைசேரியிலிருந்து துரிதமாக விடுவிப்பதற்கும்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி
தீர்மானங்களுக்கமைவாக அரசாங்கம் துரித கதியில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நிவாரணங்களையும் நஷ்டயீடுகளையும் வழங்க வேண்டியது
அவசியமாகும். எனினும் வழக்கம் போல இழுத்தடிப்புகளை மேற்கொண்டு இம்
மக்களை மேலும் மேலும் நெருக்கடியில் தள்ள அரசாங்கம் முனையக் கூடாது.
ஏலவே
கொலன்னாவ, வெல்லம்பிட்டி உட்பட கொழும்பு மற்றும் கம்பஹாவின் பல
பகுதிகளிலும் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை போதுமான நிவாரணங்கள்
வழங்கப்படவில்லை. வாக்குறுதியளிக்கப்பட்ட படி 10 ஆயிரம் ரூபா பண
உதவி கூட பல குடும்பங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என மக்கள்
குற்றம்சாட்டுகின்றனர்.
மீத்தொட்டமுல்ல
குப்பைமேடு சரிவு அனர்த்தமானது மனிதர்களால் ஏற்பட்டது என்பதில்
சந்தேகமில்லை. அந்த இடத்தில் அரசாங்கமே குப்பைகளைக் கொட்டி குப்பை
மலையை தோற்றுவித்தது. இன்று அதே குப்பை மலை சரிந்து மக்களின் உயிர்கள்
காவு கொள்ளப்பட்டுள்ளன.
எனவேதான்
அரசாங்கம் இதற்கு முழுமையாகப் பொறுப்புச் சொல்லக்
கடமைப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக
நிவாரணங்களை வழங்கும் தனது கடமையைச் சரிவர நிறைவேற்றவும் முன்வர
வேண்டும்.
அதேபோன்று
இந்த விடயத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுக்களை அள்ளி
வீசுவதைத் தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விடயத்தில்
ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். மேலும் குப்பைகளை எங்கு கொட்டுவது என்பதில்
கொழும்பு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காணவும் அனைவரும்
கைகோர்க்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
