சட்ட விரோத காணி சுவீகரிப்பாளர்களை FCID இல் முறைப்பாடு செய்யுமாறு கோரிக்கை

 
 
(எம்.ஜே.எம்.சஜீத்)

ஒலுவில் பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை சட்டத்துக்கு முரணாக அபகரித்து கொண்டவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதற்கு ஒலுவில் ஜூம்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரால் அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில் (18) அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே ஒலுவில் ஜூம்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரால் மேற்குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை அரச அதிகாரிகள் சிலர் முறையற்ற வகையில் பொய்யான தகவல்களை வழங்கி தங்களின் குழும்பத்தினரின் பெயர்களில் இக்காணிகளைப் பெற்றுள்ளனர்.

ஒலுவில் பிரதேச மக்கள் துறைமுகம், மீன்பிடித் துறைமுகம், மகாபொல பயிற்சி நிலையம், பல்கலைக்கழகம், சுற்றுலாவிடுதி போன்றவற்றிற்கு தங்களின் காணிகளை வழங்கிய நிலையில் கடலரிப்பினால் ஒலுவில் பிரதேச காணிகள் சூரையாடப்படும் நிலையில் மிகவும் நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒலுவில் மக்களின் பொதுத் தேவைக்காகவும் குறிப்பாக வைத்தியசாலை, பொது விளையாட்டு மைதானம், வீடமைப்பு கிராமங்கள் அமைப்பதற்காக காணிகள் இல்லாமல் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

முறையற்ற வகையில் காணிகளைப் பெற்ற 23 நபர்களிடம் ஒரு காணித்துண்டுக்கு  02 இலட்சம் ரூபா பணம் வழங்கி இக்காணிகளை ஒலுவில் பிரதேசத்தில் வீடுகள் இல்லாத மக்களுக்கு வீடமைப்பு திட்டம் ஒன்றினை உருவாக்குவதற்கு இக்காணிகளை வழங்குமாறு ஒலுவில் ஜூம்ஆ பள்ளிவாசலினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டு 12 பேர் மாத்திரம் பணத்தைப் பெற்றுக் கொண்டு காணிகளை கையளித்துள்ளனர். 

மீதி 11 பேர் காணிகளை கையளிப்பதாக இணக்கம் தெரிவித்துவிட்டு இதுவரையும் அதனை வழங்கவில்லை. எனவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு இவர்களுக்கு எதிரான விசாரனைகளை மேற்கொள்வதற்கான முறைப்பாட்டினை மேற்கொள்வதற்கு இப்பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொண்டு அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவரினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் இக் காணிகளை சம்பந்தப்பட்டவர்கள் ஒலுவில் வீடமைப்பு திட்டம் அமைப்பதற்கு வழங்க வேண்டும் எனவும் இல்லையெனில் அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதாகவும் சபையில் தீர்மானிக்கப்பட்டது.

ஒலுவில் பிரதேச மக்கள் நீண்ட காலமாக இக்காணிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருவதுடன் மக்கள் பேரணிகளையும் நடாத்தி பல ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.