லண்டன் மாநகரில் மர்ம நபர்கள் கத்தியால் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் மாநகரின் Enfield பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இரவு மர்ம நபர்களால் கத்தியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மட்டுமின்றி அதே நாளில் பகலில் 41 வயது நபர் ஒருவர் துப்பாக்கியல் சுடப்பட்டும் கத்தியால் தாக்கியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 3 வாரங்களில் தொடர்ந்து மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி கொலை செய்து வரும் சம்பவம் லண்டன் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுவரை 13 பேர் கத்தியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட இரு சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பொலிசார் இருவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பட்டப்பகலில் 41 வயது நபர் ஒருவர் படுகாயமடையும் மட்டும் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். கண்டிப்பாக பொதுமக்களில் சிலரேனும் இச்சம்பவத்தை நேரில் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு எனவும், அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Enfield பகுதியில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட பகுதியில் 19 மற்றும் 17 வயதுடைய இரு இளைஞர்கள் படுகாயத்துடன் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் இல்லை என்பதால் மிக விரைவில் இந்த வழக்கு தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மாநகரில் தொடரும் மர்ம கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு பொதுமக்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என லண்டன் மேயர் சாதிக் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.