உத்தியோகபூர்வமமற்ற பொலிஸ் படையாக இயங்க சிங்கள இளைஞர்கள் மத்தியில் ஞானசார அழைப்பு விடுத்திருப்பதன் பின்னனியில் யாருடன் போரிடுவதற்கு ஞானசார திட்டமிடுகிறார். என்பதை நல்லாட்சிக்கு வாக்களித்த முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
1915 ல் அனகாரீக தர்மபால என்கிற சிங்கள தேசிய இனவாதியின் அழைப்பை ஏற்று அன்று ஒன்றுதிரண்ட சிங்கள இளைஞர்கள் இனக்கலவரம் ஒன்றை தோற்றுவித்து முஸ்லிம்களை கொன்று குவித்த வரலாற்றைப் போல் ஒரு சம்பவத்தை மீண்டும் ஞானசார தொடங்கி வைப்பதற்கான அழைப்பாகவே கருத வேண்டியுள்ளது.
ஞானசார என்பவர் நாய்கூண்டில் அடைக்கப்பட வேண்டியவர், என பிரச்சாரம் செய்த நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரி அவர்கள் புதைபொருள் ஆராய்ச்சி(பௌத்த சின்னங்களை பாதுகாக்கும்) படையணிக்கு பொறுப்புதாரியாக ஞானசாரவை நியமித்து படைபலத்துடனும் அரச பாதுகாப்புடனும் உலாவ விடுவதானது, முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்கு வாதத்தை ஊக்குப்பதற்கான ஒரு செயலாகும்.
ஞானசார தேரர் தொடர்ந்து இஸ்லாமியர்களையும், இஸ்லாத்தையும், இஸ்லாமிய சட்டதிட்டங்கள், கலாச்சாரம் என்பனவற்றுடன் முஸ்லிம் சமூகம் தங்களுடைய உயிரிலும் மேலாக நேசிக்கும் குர்ஆனையும், நபிகள் நாயகத்தையும், ஏக இறைவன் அல்லாஹுவையும் இழிவாக ஊடகங்களில் பேசிவருவதை எல்லாக் காலமும் அனுமதிக் கொண்டிருக்க முடியாது.
இவ்வாறாக ஞானசார தொடர்ந்து பேசிக் கொண்டு இருப்பாராக இருந்தால் அதுவே நாட்டில் சிங்கள முஸ்லிம் இனக்கலவரம் உருவாக காரணமாக அமைந்துவிடும்.
அதற்கு அரசாங்கமே அனுசரணை வழங்குவது போலாகிவிடும்.
எனவே, நல்லாட்சியை கொண்டுவர முஸ்லிம்களின் வாக்குகளை தங்கத்தட்டில் வைத்து தாரைவார்த்து கொடுத்து அமைச்சர்களாக அலங்கரிக்கும் முஸ்லிம் தலைமைகள் உடனடியாக இதற்கான தீர்வை அரசாங்கத்திடமிருந்து பெற்றுத்தர முன்வர வேண்டும். அரசாங்கம் இதனை கவனத்தில் கொள்ளாத பட்சத்தில் சர்வதேச முஸ்லிம் நாடுகளின் கவனத்திற்கு கொண்டுசெல்ல தாமதிக்காது செயல்பட வேண்டியதன் காலகட்டாயத்தை உணர்ந்து முஸ்லிம் தலைமைகள் செயலாற்ற வேண்டும்.
அஹமட் புர்கான்
கல்முனை
