கின்னஸ் சாதனை புத்தகத்தில் உலகின் மிக வயதான ஆண், வயதான பெண் என்றெல்லாம் இடம் பெற்றுள்ளனர் ஆனால் ஒரு குடும்பம் அந்த சாதனையை தற்போது நிகழ்த்தியுள்ளது.
வடக்கு அயர்லாந்தை சேர்ந்த பீட்டர் (வயது 79) மற்றும் எல்லென் (வயது 90) தம்பதியினருக்கு மொத்தம் 16 குழந்தைகள். இதில் பீட்டர் தனது பெற்றோருக்கு ஒன்னெ ஒன்னு கண்ணே கண்ணு என தனித்துப் பிறந்தவர் ஆனால் எல்லென் 14ல் ஒன்னு. இவர்களுக்கு பிறந்தது மொத்தம் 16 குழந்தைகள்.
சீன் (வயது 93), மவ்ரீன் (92), ஐலீன் (90), பீட்டர் (87), மைரீட் (86), ரோஸ் (85), டோனி (83), டெர்ரி (81), ஷீமஸ் (80), பிரையன் (76), கேத்லீன் (75), கோல்ம் (73) மற்றும் லியோ (72) ஆகிய 13 குழந்தைகள் மட்டுமே இன்று வரை உயிருடன் வாழ்கின்றனர்.
இவர்களில் லியோவுடன் இரட்டையர்களில் ஒருவராக பிறந்த ஆஸ்டின் (72) கடந்த 2015 ஆம் ஆண்டு மரணமடைந்துள்ளார். மைக்கேல் என்ற இவர்களின் கடைசியாக பிறந்த சகோதரர் 1975 ஆம் ஆண்டு தனது 25 வது வயதிலேயே முதல் மரணமாக வாகன விபத்திலும், ஒலீவர் என்பவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு தனது 64 வது வயதிலும் மரணமடைந்துள்ளனர்.
ஆக, 16ல் மூவர் மரணமடைய எஞ்சிய 13 சகோதர, சகோதரிகளும் அர்மாக் / டைரோன் எல்லையில் காலேஜ்லேண்ட்ஸ் எனும் பகுதியில் அமைந்துள்ள தங்களுடைய பூர்வீக வீட்டில் தங்களது சகோதரி மவ்ரீனின் 90வது பிறந்த நாளை கொண்டாட ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்கள் தற்போது கோவன்ட்ரீ, டப்லீன், பெல்பாஸ்ட் ஆகிய நகரங்கள் உட்பட வடக்கு அயர்லாந்து முழுவதும் பிரிந்தும் பரந்தும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த வயதான சகோதர, சகோதரிகளுக்கு சுமார் 200 பேரக்குழந்தைகள் உள்ளனர். இந்த ஒன்றுசேரல் நிகழ்வில் 13 சகோதர, சகோதரிகள் மட்டுமே கலந்து கொண்டனர் அவர்களின் துணைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இனி இப்படி ஒரு ஒன்று கூடல் சாத்தியமில்லை, அதற்கு தங்களுடைய உடல்நிலை ஒத்துழைக்காது என்றும் வருத்தப்படுகிறார் மூத்த சகோதரரான 90 வயது சீன்.
உலகில் வாழும் வயதான குடும்பம் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்தக் குடும்பத்தை பற்றிய ஓர் ஆவணப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது.