மியன்மார் இராணுவம் பங்களாதேஷுடன் அகதிகளை திருப்பியழைத்தல் உடன்படிக்கை மேற்கொண்ட நாட்களில் டஸின் கணக்கான ரோஹிங்கிய வீடுகளை தீயிட்டு கொளுத்தியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத காலப்பகுதியில் சுமார் 40 கிராமங்களில் உள்ள கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக சட்டலைட் படங்களை ஆதாரமாக கொண்டு அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மொத்தமாக அல்லது பகுதி அளவில் அழிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த நவம்பர் 23 ஆம் திகதி மியன்மார் – பங்களாதேஷ் இடையிலான அகதிகளை திருப்பியழைத்தல் புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திட்ட அதே வாரத்தில் டஸின் கணக்கான கட்டடங்கள் தீயால் அழிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் (Human Rights Watch) அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மியன்மாரின் வடக்கு பகுதி ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள் காரணமாக சுமார் 655,000 பேர் பங்களாதேசுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். குறித்த வன்முறைகளை இன அழிப்பு என ஐக்கிய நாடுகள் சபை வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
