தகுதியானவர்களுக்கு தகுதி வாய்ந்த அமைச்சுக்களை வழங்க வேண்டும்



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சென்ற காலத்தைப் போல் அல்லாது அதிக சேவைகளைச் செய்யும் அரசாக தேசிய அரசு அமைய வேண்டும். மக்கள் அதனையே எதிர்பாக்கின்றனர் என முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்தார்.

 கல்முனை தொகுதி ஐ.தே.கட்சி அமைப்பாளர் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,     

தேசிய அரசாங்கத்தின் கால எல்லை நிறைவடைந்து விட்டாலும் ஜனாதிபதியும் பிரதமரும் சமரச பேச்சு வாத்தையை முடிவுக்கு கொண்டு வந்து, தொடர்ந்தும் தேசிய அரசை கொண்டு வர முடிவு செய்துள்ளார்கள். அத்தோடு, ரணில் விக்ரமசிங்கதான் பிரதமராகவும் தொடர்ந்தும் இருப்பார் என்பதில் உறுதியாக உள்ளனர். 

எனவே இருக்கின்ற காலப்பகுதிக்குள் தேசிய அரசே இடம்பெறும். எது எப்படி இருந்தாலும் சென்ற இரண்டரை வருடப் பகுதிக்குள் இந்த அரசு பெரிதாக எதுவும் செய்யவில்லை. நாட்டு மக்களுக்கு தொழில் வாய்ப்பு மற்றும் அபிவிருத்தி என்று எதுவும் பெரிதாக இல்லை. பொருட்களுக்கு விலை குறைத்தாலும் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. 

இரவு பகலாக பாடுபட்டு வரும் ஐ.தே.கட்சி காரர்களுக்கு எதுவிதமான அடிப்படை வசதிகளும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. இரு தலைவர்களும் விமர்சிப்பதிலே காலத்தை கொண்டு சென்றார்கள். நாட்டில் படித்து விட்டு  முடித்துவிட்டு எதுவித வசதியும் இல்லாமல் மிகவும் கஷ்டத்தில் இருந்து வரும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்க வேண்டும்.

 தகுதியானவர்களுக்கு தகுதி வாய்ந்த அமைச்சுக்களை வழங்க வேண்டும். அமைச்சர்களின் அமைச்சுகளுக்கு வருகின்றவர்களை சரியாக மதித்து அவர்களுடைய குறை நிறைகளை கேட்டறிந்து செயல்பட கூடிய அமைச்சர்களை கொண்டு வர வேண்டும். காலாகாலமாக ஏமாற்றி வருகின்றவர்கள், சுறுசுறுப்பு இல்லாதவர்கள் அமைச்சராக இருந்து எந்தப் பிரயோசனமும் இல்லை. அனைத்து இன மக்களையும் ஒன்றாக மதிக்க கூடியவர்கள் இன வேறுபாடுகளுக்கப்பால் நின்று செயலாற்றக்கூடிய அமைச்சர்களை கொண்டு வர வேண்டும்.

கிழமை நாட்களில் புதன்கிழமை மக்கள் சந்திப்பு ஒன்றினை வைத்துக் கொண்டு உருப்படியாக எதுவும் நடப்பதாக தெரியவில்லை. ஆகக் குறைந்தது கிழமை நாட்களில் இரண்டு நாளாவது அமைச்சர்கள் அலுவலகத்தில் இருந்து மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு வழங்கப்பட வேண்டும். வாக்குகளை அள்ளிக் கொடுத்து விட்டு இவர்களுக்கு பின்னால் அலைந்து திரிவதே மக்களின் வேலையாக உள்ளது. 

இவைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எடுத்துரைக்க வேண்டும். புதன்கிழமை மக்கள் சந்திப்பு இருக்கின்ற நாட்களில் பாராளுமன்றமும் அல்லது வேறு ஏதும் கூட்டங்கள் இடம் பெருகிறது. அதே தினத்தில் பாராளுமன்றம் நடைபெறுவதால் மக்கள் கடும் விஷனத்துக்குள்ளாக்கப்படுகிறார்கள். 

எனவே, பாராளுமன்றத்தை வேறொரு தினங்களில் வைக்க வேண்டும். அமைச்சர்கள், மக்கள் சந்திப்பில் மிகக் கவனம் செலுத்த வேண்டும். இனியாவது இருக்கின்ற காலப்பகுதிக்குள் இந்த தேசிய அரசு நாட்டை கட்டி எழுப்ப முன்வர வேண்டும் என்று கூறினார்.