வாழைச்சேனை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக இடம்பெற்ற அமைதியற்ற சூழ்நிலை காரணமாக கைது செய்யப்பட்ட பிரதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர் உட்பட இருவரையும் எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் எச்.எம்.எம். பஸீல் கட்டளை பிறப்பித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் தர்மலிங்கம் யசோதரன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சபை உறுப்பினர் எம்.வாஸ்தீன் ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையானது 2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட அறிக்கை கடந்த மாதம் 30 ஆம் திகதி சமர்பிக்கப்படவிருந்த நிலையில் சபை தவிசாளரினால் நேற்றுவரை (08) வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதன்படி தவிசாளர் திருமதி.சோபா ஜெயரஞ்சித்தின் தலைமையில் மீண்டும் சபை அமர்வு கூடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பதாக அமைதியற்ற சூழ்நிலை அங்கு உருவானது.

0 கருத்துகள்