உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்; 32 பேருக்கு எதிராக வழக்குகள் தொடர ஆவணங்கள் சமர்ப்பிப்பு



உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற எட்டு குண்டுத்தாக்குதல்களை அடிப்படையாக வைத்து எட்டு கோவைகள் பொலிஸ் மாஅதிபரினால் சட்ட மாஅதிபருக்கு கையளிக்கப்பட்டுள்ளதுடன் 32 பேருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு போதுமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


கடந்த அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் சிலரது பெயர்களும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;


அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சட்ட மா அதிபர் 12 நீதிபதிகளை நியமித்துள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சட்ட மாஅதிபருக்கு கிடைத்ததும் புதிய சாட்சிகளையும் இணைத்துக்கொண்டு அவர் அதனை ஆராய்ந்த பின்னர் யாருக்கு எதிராக வழக்கு தொடரப்பட வேண்டும் என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.


நாம் 32 பேருக்கு எதிராக மனிதப் படுகொலைகள் மற்றும் சூழ்ச்சி தொடர்பில் வழக்கு தொடர போதுமான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளோம். மேலும் 251 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் மாதங்களில்மேற்படி வழக்கு விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் மக்கள் அறிந்து கொள்ள முடியும். ஜனாதிபதி விசாரணைக் குழு அறிக்கையின்படி


முக்கியஸ்தர்கள் சிலரும் அதில் உள்ளடங்குகின்றனர் ஓரிரு தினங்களில் அது வெளிப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்