இனவாதம் என்பது வாக்குகளைப் பெற உதவலாமே தவிர நாட்டைக் கட்டியெழுப்ப ஒருபோதும் உதவாது. இவ்வாறு பொத்துவில் ஆத்திமுனை கிராமிய பாலம் அடிக்கல் நடுவிழாவில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷரப் தெரிவித்தார்.
'இதயங்களை இணைக்கும் கிராமிய பாலம்' என்ற அரசாங்கத்தின் 5000 சிறிய பாலங்களை அமைக்கும் திட்டத்திற்காக பொத்துவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட வேண்டிய 20 பாலங்களில் முதலாவது பாலமான ஆத்திமுனை பாலத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் முஷரப் கலந்து கொண்டார். நிகழ்வில் விஷேட அதிதிகளாக பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.அப்துல் றஹிம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் வை. றாசித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்தும் பேசுகையில் இனங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கு நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதன் ஒரு அங்கமாக பாலத்திற்கான கல்லை இரு சமய தலைவர்களும் இணைந்து நட்டனர் என்றார்.
சிறப்பு அதிதிகளாக சிங்கபுர விகாராதிபதி வண. உபானன்த தேரர், பொத்துவில் ஜம்மியத்துல் உலமா தலைவர் ஏ. ஆதம்லெப்பை மௌலவி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த குமார திசாநாயக்க, பிரதேச சபையின் உப தவிசாளர் பி.பார்த்தீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காரைதீவு நிருபர்

0 கருத்துகள்