(இராஜதுரை ஹஷான்)
மசகு எண்ணெய் இறக்குமதிக்கு தேவையான டொலரை திரட்டிக் கொள்வதில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நெருக்கடியினை தற்போது எதிர்கொண்டுள்ளது. எதிர்வரும் மாதம் முதல் நாட்டில் நிச்சயம் எரிபொருள் விநியோகத்தில் பாரிய தட்டுப்பாடு ஏற்படும். எரிபொருள் தொடர்பில் தொடர்ச்சியாக காணப்படும் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ள அரசாங்கம் உரிய திட்டத்தை வகுக்கவில்லை. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பொது சேவைகள் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வெல தெரிவித்தார்.
எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு கூட முடியாத அளவிற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் டொலர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
கடந்த 4 ஆம் திகதி 92 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதற்கு மாத்திரம் 60 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளன.
தேசிய கட்டமைப்பிலான எரிபொருள் விநியோகத்தில் ஒரு நாளைக்கு மாத்திரம் சுமார் 5,500 மெற்றிக் தொன் எரிவாயு அவசியமாகும். தற்போதைய நிலையில் 3,000 ஆயிரம் மெற்றிக் தொன்னிற்கும் குறைந்தளவிலான எரிபொருள் தேசிய மட்டத்தில் அனைத்து சேவைகளுக்காகவும்,பொதுமக்களின் நுகர்விற்காகவும் விநியோகிக்கப்படுகிறது.
90 நாட்களுக்கு முன்னர் எரிபொருள் இறக்குமதிக்கான டொலரை உரிய நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும். ஜனவரி மாத்திற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு பெற்றோலிய வளங்கள் கூட்டுத்தாபனம் வலு சக்தி அமைச்சிடம் கோரிய நிதி இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை. ஆகவே எதிர்வரும் மாதம் நாட்டில் நிச்சயம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்.
எரிபொருள் இறக்குமதியில் தொடர்ச்சியாக நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. இலங்கை பெற்றோலிய வளங்கள் கூட்டுத்தாபனத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.
0 கருத்துகள்