31ஆம் திகதி அடுத்த விசாரணை!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், 03 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான குற்றப்பத்திரிகை, அவர்களின் சட்டத்தரணிகள் முன்னிலையில் வாசிக்கப்பட்டு கட்சியினால் வழங்கி வைக்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசராணை இன்று (23) மாலை கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில், கட்சியின் ஒழுக்காற்று குழு முன்னிலையில் நடைபெற்றது.
“ கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக இயங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், முஷரப் முதுநபின் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோருக்கு எதிராக கட்சியின் ஒழுக்காற்று விசாரணை குழுவினால் விசாரிக்கப்படுவதற்காக பலமுறை அழைக்கப்பட்டதற்கிணங்க இன்றைய தினம் வருவதாக அறிவித்தனர்.
இன்றைய தினம் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தரணிகளை அழைத்து வருவதாக ஏலவே அறிவிக்காமல் அழைத்து வந்தனர். ஆனாலும், 03 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டத்தரணிகள் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள கட்சியின் உயர்பீடம் அனுமதி வழங்கியது.
இதன் போது, கட்சியினால் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டதன் பின்னர் , பாராளுமன்ற உறுப்பினர்களின் சட்டத்தரணிகளிடம் கையளிக்கப்பட்டது. “
மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களின் சட்டத்தரணிகள் குற்றப்பத்திரிகையை ஆராய வேண்டியதாக கோரி அடுத்த விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கோரியிருந்தனர்.
அதன் பிரகாரம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டதாக கட்சி வட்டார தகவல்கள் மூலம் அறியக்கிடைத்தது.