ஒரு வாரம் கடந்தும் மண்ணெண்ணெய் இல்லை


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது.


திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் கிடைக்கப் பெறவில்லை. 


இதனால் பகலிலும் இரவிலும் காத்திருந்து ஏமாற்றத்துடன் வெறுங்கையுடன் செல்வதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


திருகோணமலை மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இராணுவத்தினர், பொலிஸார் என பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


ஆனால் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் இன்மை காரணமாக பல்வேறுபட்ட சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாக சாரதிகள் துறை சார் இயந்திர தொழிலாளர்கள், குடும்ப பெண்கள் என பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.


திருகோணமலை நகர், கிண்ணியா, கந்தளாய், முள்ளிப்பொத்தானை உள்ளிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது.


இன்று (31) சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல கேன்கள் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் அடுக்கப்பட்டுள்ளது. 


உப்பு செய்கை உற்பத்தியாளர்கள், ஆழ் கடல் இயந்திர மீனவர்கள் தொழிலின்றி இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.