பேருந்து கட்டண திருத்தம் குறித்து இறுதி முடிவு நாளை!




ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள பஸ் கட்டணங்கள் தொடர்பில் நாளை (28) இறுதித் தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எரிபொருள் விலையேற்றத்திற்கு அமைவாக பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென பஸ் சாரதிகளின் தொழிற்சங்கங்கள் நேற்று (26) தெரிவித்திருந்தன.

இதன்படி நாளை போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்தார்.

பஸ் கட்டணத் திருத்தம் ஒவ்வொரு வருடமும் ஜூலை 1 ஆம் திகதி அமுல்படுத்தப்படுவதாகவும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தற்போது 12 காரணிகளின் கீழ் இதற்கான கணக்கீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக எரிபொருள் விலையேற்றம் காரணமாக கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான சந்திப்பொன்று நாளை போக்குவரத்து அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேருந்துக் கட்டணத் திருத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணையம் (என்டிசி) அளித்துள்ள பரிந்துரைகள் போக்குவரத்து அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் ஒப்புதலின் அடிப்படையில் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றார்.