தன்னை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு தாக்கல்.


 தன்னை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்


ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.


கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற ´மைனா கோகம´ மற்றும் ´கோட்டா கோகம´ போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தான் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாக மனுதாரர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது மனுவில் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மைச் சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்யத் தயாராகி வருவதாகவும், இது சட்டத்திற்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனவே தம்மை கைது செய்ய தடை உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.


மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.