வாழைப்பழ ஏற்றுமதியினால் டொலர்களை குவிக்கும் இலங்கை



வாழைப்பழம் பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்படாத உணவுப் பண்டமாகும். மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.






எனினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழைப்பழ ஏற்றுமதி மூலம் பெருந்தொகை டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆறு மாத காலப்பகுதியில் கதலி எனும் புளிவாழை ஏற்றுமதி மூலம் 25 ஆயிரம் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இராஜாங்கனை வாழைச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.




உலக வங்கி உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையின் விவசாயத்துறையை புதுப்பிப்பதற்காக விவசாயப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது. இந்த பிரிவு இராஜாங்கனை பிரதேசத்தில் புளிவாழை செய்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதாக திட்டத்தின் பணிப்பாளர் ரொஹான் விஜேகோன் தெரிவித்தார்.




இதன் மூலம் வருடாந்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோகிராமுக்கும் மேற்பட்ட தரமான வாழையை உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்க முடிகின்றது.




இதேபோல் சில வெளிநாடுகளுக்கு இந்த வாழை ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஒரு மெற்றிக் தொன் வாழை 600 முதல் 700 டொலர்கள் வரை விற்பனை செய்யப்படுவதாக புதிய புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.