சுவிட்சர்லாந்தில் அல் குர்ஆனுக்கு தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சுவிட்சர்லாந்து நாட்டில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானிற்கு தடை விதிக்க வேண்டும் என சுவிஸ் மக்கள் கட்சி விடுத்துள்ள கோரிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

சுவிஸ் நாட்டின் தேசிய கவுன்சிலரும் சுவிஸ் மக்கள் கட்சியின்(SVP) நாடாளுமன்ற உறுப்பினருமான Walter Wobman என்பவர் தான் இந்த சர்ச்சைக்குரிய கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், 
‘சுவிஸ் நாட்டின் கலாச்சாரம் மற்றும் அரசியலமைப்பு சட்டங்களுக்கு எதிராக உள்ள குரான் புத்தகத்தை தடை செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையின் மூலம் சுவிஸ் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரின் இக்கோரிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சுவிஸ் தேசிய கவுன்சிலரான Yannick Buttet இக்கோரிக்கையை எதிர்த்து கருத்தை வெளியிட்டுள்ளார்.

‘குரான் புத்தகத்தை சில ஐ.எஸ் தீவிரவாதிகள் பிற நபர்களுக்கு கொடுத்து தங்களது இயக்கத்தில் சேர்க்க முயற்சிப்பதால் சட்டவிரோதமான சில செயல்கள் நிகழ்கின்றன. ஆனால், இதற்கு புத்தகத்தை தடை செய்வது என்பது கண்டிக்கத்தக்கது. புத்தகத்தை தடை செய்வதை விட இதுக்குறித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

கிரீன் கட்சியை சேர்ந்த Lisa Mazzone என்பவர் வெளியிட்டுள்ள கருத்தில், ‘குரானை தடை செய்வது என்பது சுவிஸில் மதம் தொடர்பான சுதந்தரத்தில் தலையிடுவதற்கு சமமாகும்.

குறிப்பிட்ட ஒரு மதத்தை குறிவைத்து அம்மதத்திற்கு சொந்தமான குரான் புத்தகத்தை தடை செய்ய முயற்சிப்பது சுவிஸ் இறையான்மைக்கு எதிரான செயல்’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.