பெண்களுக்கான சந்தைத் தொகுதியை மக்களிடம் கையளிப்பதற்கு பிர்னாஸ் இஸ்மாயிலினால் முன்னெடுப்பு



ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான் -  

ஏறாவூர் புன்னக்குடா வீதியில் சுமார் 200 மில்லியன் ரூபா நிதியின் மூலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதி மற்றும் பெண்களுக்கென்று தனியாக 87 இலட்சத்தி 90 ஆயிரம் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்கள் சந்தைக் கட்டிடத் தொகுதி போன்றவற்றை மேற்பார்வையிடுவதற்காக ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையிலான குழுவினர் நேரடி கள விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டனர்.

இந்தக் களவிஜயம் நேற்று (18) மேற்கொள்ளப்பட்டது. இதில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எஸ்.தயாளன், எம்.அண்டனி உள்ளுராட்சி உதவியாளர் ஏ.ஏ.ஆரீப் உள்ளிட்ட பலர் இந்த விஜயத்தை மேற்கொண்டு இரு சந்தைத் தொகுதிகளின் வேலைகளை பார்வையிட்டனர்.

பொதுச் சந்தையின் நிர்மாணப்பணிகளின் வேலைகள் காலதாமதம் ஏற்படுதற்கான காரணங்களையும் இதன்போது கேட்டறிந்து கொள்ளப்பட்டு அதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறும் செயலாளரினால் பணிக்கப்பட்டது.   

அத்தோடு, பெண்களுக்கென்று புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள பெண்கள் சந்தைக் கட்டிடத் தொகுதியை எதிர்வருகின்ற புதிய ஆண்டில் மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன. அக்கட்டிடத்தின் வேலைகளை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் பாவனைக்கு உகந்த தன்மையில் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தும் பரிசோதனையும் அன்றை தினம் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.  

அதற்கமைவாக, உறுதி செய்யப்பட்ட கட்டிடத் தொகுதியிலுள்ள கடைகளை வாடகைக்கு விடுதற்கான திறந்த கேள்வி கோரல் பத்திர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அது தொடர்பான அதிகாரிகளுக்கு நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயிலினால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.