நாடளாவிய வன்முறைகளில் எண்மர் பலி: 103 வீடுகள் - 88 வாகனங்கள் சேதம்



நாடளாவிய ரீதியில் நேற்று (09) இடம்பெற்ற மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றனர்.


மேலும், 41 வாகனங்களும், 65 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக, காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், நேற்றைய வன்முறை சம்பவங்களால் 38 வீடுகளும், 47 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்த 8 பேரில் ஆறு பேர் மேல் மாகாணத்திலும், இருவர் தென் மாகாணத்தில் நடந்த வன்முறையின்போதும் பலியாகியுள்ளனர்.


அந்த அறிக்கையின்படி, மேல் மாகாணத்தில் மாத்திரம் 15 வாகனங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், 29 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேல் மாகாணத்தில் 8 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், 23 வீடுகள் சேதமடைந்துள்ளன. 


தென் மாகாணத்தில் 7 வீடுகள் தீயினால் சேதமடைந்துள்ளதுடன் 9 வீடுகள் தாக்குதல்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.


மேலும், தென் மாகாணத்தில் 5 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 


சப்ரகமுவ மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஒன்பது வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் மேலும் இரண்டு வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.


மேலும் அம்மாகாணத்தில் எட்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது்டன் 5 வீடுகள் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர்களில் நாடாளுமன்ற உறுப்பினரொருவரும், பிரதேச சபைத் தலைவரொருவரும், உப காவல்துறை பரிசோதகரொருவரும், காவல்துறை சார்ஜன்ட் ஒருவரும் உள்ளடங்குவதாக காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளது.