அரச ஊழியர்கள் 5 நாட்களும் சமுகமளிப்பது அவசிமற்றது என வெகுவிரைவில் அறிவிக்கப்படும் : அமைச்சர் மஹிந்த அமரவீர



(இராஜதுரை ஹஷான்)


சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே உணவு பற்றாக்குறை சவாலை சிறந்த முறையில் வெற்றி கொள்ள முடியும். அரச ஊழியர்கள் 5 நாட்களும் சமுகமளிப்பது அவசிமற்றது என வெகுவிரைவில் அறிவிக்கப்படும் ஆகவே அனைவரும் காலத்தை பயனுடையதாக்கும் வகையில் வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபட வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.


கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக உணவு பற்றாக்குறை தொடர்பில் பல்வேறு தரப்பினர் எதிர்வு கூறியுள்ளார்கள். இச்சவாலை வெற்றி கொள்ள அரசாங்கம் சிறந்த திட்டங்களை வகுத்துள்ளதுடன், அவற்றை விரைவாக செயற்படுத்த தீர்மானித்துள்ளது. பல்வேறு காரணிகளினால் தேசிய விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளது.


அரச காரியாலயங்களை சூழவுள்ள காணிகளில் மேலதிக பயிர்ச் செய்கையில் ஈடுபடுமாறு சகல அரச ஊழியர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


அத்துடன் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள விசாலமான அரச மற்றும் தனியார் காணிகளில் தற்காலிகமாக மேலதிக பயிர்ச் செய்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அரச சேவையாளர்கள் 5 நாட்களும் சேவைக்கு சமுகமளிப்பது அவசியமற்றது என விரைவில் அறிவிக்கப்படும். ஆகவே அரச சேவையாளர்கள் மேலதிகமாக உள்ள நேரத்தை பயனுடையதாக்கும் வகையில் வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடபட வேண்டும்.


சகல தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே உணவுத் தட்டுப்பாட்டு சவாலை வெற்றி கொள்ள முடியும். பொதுமக்கள் இயலுமான அளவு தமக்கு தேவையான உணவு பொருட்களை உற்பத்தி செய்துகொள்ள வேண்டும் என்றார்.


எரிபொருள் மற்றும் உரம் இன்மையினால் பெரும்பாலான விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை புறக்கணித்துள்ளார்கள்.


பொலன்னறுவை உள்ளிட்ட பிரதான விவசாய மாவட்டங்களில் சிறுபோக விவசாய நடவடிக்கை கனிசமான அளவு முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.


எரிபொருள் பற்றாக்குறை காரணமாக விவசாயத்திற்காக நிலத்தை சீர் செய்யும் பணிகள் தடைப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தை கருத்திற் கொண்டு எரிபொருள் விநியோகத்தில் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.