இந்தியாவிடமிருந்து 65,000 மெட்ரிக் தொன் உரத்தை இறக்குமதி செய்யும் பொருட்டு 5.5 கோடி டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து


இன்று (10) இந்திய EXIM வங்கியிடமிருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.


நிதியமைச்சின் செயலாளர் எம். சிறிவர்தன மற்றும் EXIM வங்கியின் பொது முகாமையாளர் நிர்மித் நரேந்திர வெத் ஆகியோரிடையே இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.


சிறுபோக செய்கைக்காக 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்யும் பொருட்டு இந்திய அரசாங்கத்திடம் குறித்த கடன் உதவியை இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது.


இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவில் இருந்து யூரியா உரம் கொள்முதல் செய்வதற்கு 55 மில்லியன் (5.5 கோடி) அமெரிக்க டொலர்கள் கடனை வழங்க இந்திய அரசு ஒப்புக்கொண்டது.


குறித்த கடன் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்றையதின் (10) பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையில் இடம்பெற்றது.


அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே தனது முன்னுரிமை என்று பிரதமர் இதற்கு முன்னர் சுட்டிக்காட்டியிருந்தார்.


அதற்கமைய, இந்த கடன் வசதியானது எதிர்வரும் சிறுபோக செய்கைக்கு யூரியா கிடைப்பதை உறுதி செய்ய உதவும் என, பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.