பசில் ராஜபக்ஷ இராஜினாமா செய்தமையால் வெற்றிடமாகிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் எம்.பியாக, தம்மிக பெரேராவின் பெயர் குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிடமான தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு தம்மிக பெரேராவை நியமிப்பது தொடர்பில் பெயரை குறிப்பிட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசமினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
தொழிலதிபர் குலப்பு ஆரச்சிகே தொன் தம்மிக பெரேரா, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இடமிருந்து அக்கட்சியின் உறுப்புரிமையை இன்றையதினம் பெற்றுக் கொண்டிருந்தார்.
இதேவேளை, எம்.பி. பதவியை ஏற்பதற்காக தொழிலதிபர் தம்மிக பெரேரா, தான் பதவி வகித்த பல்வேறு நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளிலிருந்து விலகியிருந்தார் என்பதுடன், அவரது இராஜினாமா தொடர்பில் குறித்த நிறுவனங்கள், கொழும்பு பங்குச் சந்தைக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்றையதினம (6/9) தான் வகித்த தேசியப் பட்டியல் எம்.பி. பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.