ஜோன்ஸ்டன் பெர்னான்டோவை கைது செய்ய தொடர்ந்து தேடும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்


(எம்.எப்.எம்.பஸீர்)


“மைனா கோ கம”,”கோட்டா கோ கம” மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான விவகாரத்தில் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தலங்கமைவைச் சேர்ந்த 53 வயதான, முன்னாள் பிரதமர் மஹிந்தவின் இணைப்புச் செயலாளர் ஒருவரே இவ்வாறு கொழும்பில் வைத்து சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.


இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர், கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டு, எதிர்வரும் 8 ஆம் திகதி வரை அடையாள அணிவகுப்பின் நிமித்தம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இதனிடையே இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய பல சி.ஐ.டி. குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார். அவரைக் கைது செய்ய பொலிசார் தொடர்ச்சியாக தேடி வருவதாக அவர் கூறினார்.


சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காவிந்த பியசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில், உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் இந்த சி.ஐ.டி. குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுக்கள் குருணாகல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜோன்ஸ்டனை கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக சென்றுள்ள போதும், இன்று (6) மாலை வரை அவரைக் கைது செய்ய முடியவில்லை எனவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.


கடந்த மே 09ஆம் திகதி அலரிமாளிகையில் ஒன்றுக்கூடிய அரசாங்கம் ஆதரவாளர்கள் இடையே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆவேசமாக உரையாற்றியிருந்தார்.


அந்த உரையை விசாரணை அதிகாரிகள் பிரபல உளவள நிபுணர்களான நீல் பெர்னான்டோ, குணதாஸ பெரேரா ஆகியோருக்கு செவிமடுக்க செய்து விசேட அறிக்கையொன்றினை பெற்றுள்ளனர்.


இந்நிலையில் குறித்த உரையடங்கிய இறுவட்டை அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி அறிக்கை பெற அனுமதி பெறப்பட்டுள்ளது.


இவ்வாறான நிலையில், குறித்த தாக்குதல்களில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக உள்ள சாட்சியங்கள் பிரகாரம், அவரைக் கைது செய்ய சி.ஐ.டி.யினர் தீர்மானித்துள்ள நிலையிலேயே, அது குறித்து நீதிமன்றுக்கும் அறிவிக்கப்பட்டு, தற்போது அவர் தேடப்பட்டு வருகின்றார்.