கல்முனைப் பொது மயானத்திலிருந்து மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவில் உடையார் வீதியைச்சேர்ந்த 58 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான காளிக்குட்டி கணேசன் கடந்த வியாழக்கிழமை (2) மாலை காணாமற்போயிருந்த நிலையில், பொது மயானத்தில் சடலமாகக் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸ் குழுவினர் சென்று விசாரணை மேற்கொண்டு தடயப்பொருட்களை ஆய்வு செய்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சடலத்திற்கு அருகிலிருந்து அலறி விதைகள் மீட்கப்பட்டிருந்தன. சம்பவ இடத்தில் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.