கல்முனை சுகாதார பணிமனையினால் பயிர்செய்கை வேலைத்திட்டம் ஆரம்பம்.

 

நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்


நாட்டின்  தற்போது நிலவும் பொருளாதார  நிலையை கருத்தில் கொண்டு கல்முனை பிராந்திய சுகாதார  சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களில் பயிர் செய்கையை மேற்கொள்ளும் முகமாக மரவெள்ளி நடும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் விதமாக அதிகாரிகளுக்கு மரவெள்ளி தண்டுகள் கையளிக்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் இன்று (20) இடம்பெற்றது.


அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபருக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளார் ஐ.எல்.எம். றிபாஸ் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த மரவெள்ளி தண்டுகள் (500)  உஹன விமான படைத்தள முகாமினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . இது தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார  சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் ஐ.எல்.எம். றிபாஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,


நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உணவு தட்டுப்பாடுகளுக்கு தீர்வு வழங்கும் முகமாக பல்வேறுபட்ட வேலைத் திட்டங்களை சுகாதாரத்துறையாக இருந்தாலும் கூட கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை கடந்த 02 மாதங்களாக முன்னெடுத்து வருகின்றது. இதனடிப்படையில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் உள்ள வைத்தியசாலைகளில் 02 வகையான பயிர் செய்கையினை மேற்கொள்ளும் முகமாக ஆர்வமூட்டி வருகிறோம். 


முதலாவதாக சகல ஆயுர்வேத வைத்தியசாலைகளிலும் ஆயுர்வேத மூலிகைகளை வைத்தியசாலைகளின் இட வசதிக்கு ஏற்ப ஆகக் குறைந்தது 25 வகையான மூலிகையாவது அந்த இடத்தில் வளர்த்து அவற்றின்  பெயர் பட்டியலோடு நாற்றுகளையும் தயார் செய்து குறித்த ஆயுர்வேத வைத்தியசாலை பகுதியில் உள்ள பொதுமக்கள், பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் மூலிகை மருந்துகளை அறிமுகம் செய்வதோடு அது தொடர்பான கையேடுகளை வழங்குவது தொடர்பாக மாணவர்களுக்கான நிகழ்ச்சி திட்டங்களும் கடந்த 04 மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு பல ஆயுர்வேத வைத்தியசாலைகளில் "ஹெர்பல் கோனர்" எனும் மூலிகை தோட்டங்களை உருவாக்கி வருகின்றோம்.


மேலும்  உணவு தட்டுப்பாட்டை நிபர்த்தி செய்யும் முறையில் நாங்கள் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைய கல்முனை பிராந்திய பணிப்பாளர் பிரிவில் உள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு எமது நிர்வாகத்துக்குட்பட்ட பிரிவில் சுமார் 50 ஏக்கர் வரையான வெற்றுக் காணிகள்  இருக்கும் அளவில் சுமார் 16 ஏக்கர் நிலபரப்பில் பயிர் செயக்கை  மேற்கொள்ள முடியுமென அடையாளப்படுத்தப்பட்டுள்ளது ,


 எமது ஊழியர்களை ஊக்கப்படுத்தும் முகமாக பயிர் செய்கைக்கான தண்டுகள் மற்றும் நாற்றுகள் இதர பயிர் செய்கைக்குரிய உதவியினை செய்யுமாறு அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபருக்கு கோரிக்கை விடுத்த நிலையில் உஹன விமான படைத்தள முகாமினால்  சுமார் 500 மரவள்ளி தண்டுகள் வழங்கப்பட்டிருந்தது  இந்நிலையில் குறித்த  மரவள்ளி தண்டுகள் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பிரிவில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இன்று பிரித்து வழங்கப்பட்டிருந்தது. இது போல் பாசிப்பயறு, கெளபி, முருங்கை, பொன்னங்கேணி, போன்ற பயிர் செய்கைகளை எமது கல்முனை பிராந்திய பணிப்பாளர் பிரிவில்  திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.


இதன் போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம்.பி.அப்துல் வாஜித், சுகாதாரப் பணிமனை திட்டமிடல் வைத்திய அதிகாரி  ஐ.எல்.எம். மாஹிர்,  கல்முனைபிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபில் உட்பட  சுகாதர  சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.