ஜூலை 16 சனிக்கிழமை பாராளுமன்றம் கூட்டப்படும்... 7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் ; சபாநாயகர்

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை

 உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சபாநாயகர், 2022 ஜூலை 14 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இராஜினாமா கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.


அரசியலமைப்பின் பிரகாரம் புதிய ஜனாதிபதியை நியமிக்கும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக செயற்படுவார் எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.


புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான பாராளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் கூறினார்.


எதிர்வரும் 7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற செயற்பாடுகளை நிறைவு செய்ய உத்தேசித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.


“அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளின்படி புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்குத் தேவையான நாடாளுமன்ற விவகாரங்களை விரைவில் நடத்துவதே எனது நோக்கம். இதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


இந்தக் காலப்பகுதியில் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு சபாநாயகர் சகல அரசியல் கட்சிகளிடமும் பாராளுமன்றத்திடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.