முட்டை விநியோகம் இடைநிறுத்தம்


முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடளாவிய ரீதியில் முட்டை விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப் பண்ணை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்தது.


உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமையால் நட்டத்தில் முட்டைகளை விநியோகிக்க முடியாது என்று சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர சுட்டிக்காட்டினார்.


வெள்ளிக்கிழமை (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாயாகவும் பழுப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

 

இந்நிலையில், அகில இலங்கை கோழிப் பண்ணை வர்த்தகர்கள் சங்கத்துக்கும் வணிக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கும் இடையிலான சந்திப்பொன்று வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சில் நாளை (22) நடைபெறவுள்ளது.