கட்டாரில் இருந்துவந்த பிக்குவிடம் இரண்டரைக் கோடி பெறுமதியான தங்க நகைகள் மீட்பு




2 கோடி 49 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் தனது பயணப் பையில் வைத்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் சென்றுகொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவரைச் சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.






தெஹியத்தகண்டிய, சிரிபுர பௌத்த மத்திய நிலையத்தைச் சேர்ந்த 58 வயதான பிக்குவே நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.




இந்தப் பிக்கு, டோஹாவிலிருந்து கட்டார் விமான சேவையின் கியூ.ஆர்–654 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.




விமானப் பயணத்தில் நட்பு கொண்ட நபர் ஒருவர், இந்தத் தங்க நகைகளை விமான நிலையத்துக்கு வெளியே எடுத்து வந்து தரும்படி தம்மிடம் ஒப்படைத்தார் என்று இந்த பிக்கு சுங்கப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.




இதையடுத்து சுங்கப் பிரிவினர் அந்த நபரையும் தேடி கைது செய்துள்ளனர்.




இந்தத் தங்க நகைகளைப் பறிமுதல் செய்த சுங்கப் பிரிவினர் பிக்குவை விடுதலை செய்து தங்க நகைகளை பிக்குவிடம் கையளித்த நபருக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதித்தனர்.


Jaffna Muslim