IMF நிவாரணத்தை பெற்றுக்கொள்வதில் அரசியல் ஸ்திரமின்மை பாதிப்பை ஏற்படுத்தும்


சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு கடன் வசதியை வழங்க இணக்கம் தெரிவித்தாலும்,  கடன் மீள்கட்டமைப்பை  ​மேற்கொள்ளும்போது, அரசியல் ஸ்திரமற்றதன்மை பாதிப்பை ஏற்படுத்தும் என Fitch Ratings நிறுவனம் தெரிவித்துள்ளது.


IMF இலங்கையின் கடன் சுமையை ‘தாங்க முடியாதளவு’ உள்ளதென மதிப்பிட்டுள்ளது. எனவே கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளின் முடிவு கடன் நிவாரணத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஆகஸ்ட் 30 ஆம் திகதி புதிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில்  செப்டம்பர் 1 முதல் VAT இன் நிலையான விகிதத்தை 12% இலிருந்து 15% ஆக உயர்த்துவதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. மேலும்,  18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய வரி பதிவு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.


”அரசாங்கத்திற்கு மூலதன செலவினை குறைக்க சில வாய்ப்புகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம், ஆனால் அதன் தேவையற்ற செலவினம் மிக அதிகம். கூடுதல் வருவாயை அதிகரிப்பது நிதி ஒருங்கிணைப்பின் முக்கிய உந்துதலாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஆனால், பொருளாதார நெருக்கடியின் விளைவுகளைத் தணிக்க சமூக செலவினங்களை மறு ஒதுக்கீடு செய்வதாக வரவு செலவுத் திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது”


சீர்திருத்தங்களைச் செயற்படுத்துவதற்கும், கடன் மறுசீரமைப்பிற்கும் அரசாங்கம் ஒப்புக்கொண்டிருந்தாலும் அரசியல் ஸ்திரத்தன்மை IMF நிதி வழங்கலில் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.


பொதுமக்களின் எதிர்ப்பைத் தடுக்க கூடுதல் சமூகச் செலவுகள் போதுமானதாக இருக்காது எனவும் அரசாங்கத்தின் பொது ஆதரவு பலவீனமாகத் தோன்றுவதால், 2023-2024 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி மீட்சியானது வலுவான நிதி ஒருங்கிணைப்பால் கட்டுப்படுத்தப்படும் எனவும் Fitch Ratings நிறுவனம் கூறியுள்ளது.